பாகிஸ்தானில் சிறுமி கற்பழித்து கொலை: ”மனித நேயம் செத்து விட்டது” பாகிஸ்தான் பெண் செய்தி வாசிப்பாளர் ஆதங்கம்


பாகிஸ்தானில் சிறுமி கற்பழித்து கொலை: ”மனித நேயம் செத்து விட்டது” பாகிஸ்தான் பெண் செய்தி வாசிப்பாளர் ஆதங்கம்
x
தினத்தந்தி 12 Jan 2018 3:28 PM GMT (Updated: 12 Jan 2018 3:28 PM GMT)

பாகிஸ்தானில் மனிதநேயம் செத்து விட்டது என்று பாகிஸ்தானில் ‘சமா’ சேனலில் பணியாற்றும் கிரண் நஸ் என்னும் பெண் செய்திவாசிப்பாளர் கூறியுள்ளார். #Pakistan ##tamilnews

லாகூர்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கசூர் நகரம். அந்த நகரத்தை சேர்ந்த ஜைனப் என்ற 7 வயது சிறுமி, கடந்த 4-ந் தேதியன்று, அதே பகுதியில் அமைந்துள்ள மத பள்ளிக்கூடத்துக்கு சென்றாள். ஆனால் அவள் வீடு திரும்பவில்லை.

அவளது பெற்றோர், அவளை தாய்மாமன்மாரிடம் ஒப்படைத்து விட்டு சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த நிலையில்தான் அவள் காணாமல் போனாள்.

இது தொடர்பாக அவளது தாய்மாமன்மார் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன ஜைனப்பை தேடினர்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று அந்தச் சிறுமி கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, அவளது உடல் எலைட் கல்லூரி அருகேயுள்ள வயல்வெளியில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவளது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் அந்தச் சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கற்பழிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது. 

இது கசூர் மக்களுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், சிறுமி ஜைனப்பின் பெற்றோர் சவுதி அரேபியாவில் இருந்து நேற்று முன்தினம் ஊர் திரும்பினார்கள். அதைத் தொடர்ந்து சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இருப்பினும் இந்த சம்பவத்தில் நீதி வழங்கக்கோரி உள்ளூர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அங்குள்ள போலீஸ் நிலையத்தையும், துணை கமிஷனர் அலுவலகத்தையும் முற்றுகையிட சென்றனர்.

அவர்களின் போராட்டத்தில் கலவரம் மூண்டது. போலீஸ் நிலையத்தின் மீது மக்கள் தாக்குதல் நடத்தினர். துணை கமிஷனர் அலுவலகத்தை சூறையாட முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
போராட்டத்தில் கலவரம் மூண்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானிலிருந்து ஒளிபரப்பாகும் ‘சமா’ சேனலில் பணியாற்றும் கிரண் நஸ் என்னும் பெண் செய்திவாசிப்பாளர் வித்தியாசமானமுறையில் இந்தச் சம்பவத்துக்குத் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர் தனது 2 வயது மகளுடன் தொலைக்காட்சியில் தோன்றி தனது எதிர்ப்பை கடுமையாகத் தெரிவித்துள்ளார். 

அவர் தொலைகாட்சியில் தனது குழந்தையுடன் பேசியதாவது:

” இன்று நான் உங்கள் முன் செய்திவாசிப்பாளர் கிரண் நஸ் ஆக வரவில்லை.  2 வயது குழந்தைக்கு தாயாக எனது மகளுடன் இங்கு வந்து உள்ளேன். பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அந்த 7 வயது சிறுமியின் சிறிய சவப்பெட்டி மிக வலிமையானதாக மாறிவிட்டது. அந்த சவப்பெட்டிக்கு முன் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் புதைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை ஆகும்.

இவ்வாறு அவர் கண்ணீர் பொங்க உணர்ச்சிகரமாக பேசினார்.

அவருடைய இந்த செயல் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது. குழந்தையுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Next Story