சிங்கப்பூரில் இந்தியர்கள் 3 பேருக்கு சிறை
சிறுமியுடன் உறவு வைத்துக் கொண்ட வழக்கில் சிங்கப்பூரில் இந்தியர்கள் 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் இந்தியாவை சேர்ந்த கில்குர்ஜந்த் சிங் (வயது 25), சுர்ஜித் சிங் (29), ஜக்ராஜ்சிங் (33).
இவர்கள் கடந்த 2016–ம் ஆண்டு அங்கு உள்ள லிட்டில் இந்தியா என்கிற நகரில் 13 வயது சிறுமியை சந்தித்தனர். பின்னர் அந்த சிறுமிக்கும், இவர்களுக்குமான பழக்கம் நெருக்கமானது. இதையடுத்து, அவர்கள் 3 பேரும் சிறுமியுடன் உடல் உறவு வைத்துக்கொண்டனர். சிறுமியின் விருப்பத்துடனே இது நடந்த போதிலும், சிங்கப்பூரில் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் உடல் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி தண்டனையாக வழங்கப்படும்.
அந்த அடிப்படையில் அந்த சிறுமியின் தாய், அவர்கள் 3 பேர் மீதும் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. இதில், 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, கில்குர்ஜந்த் சிங், சுர்ஜித் சிங் ஆகிய இருவருக்கும் தலா 15 மாத சிறை தண்டனையும், ஜக்ராஜ்சிங்குக்கு 8 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.