குடிமக்கள் கடத்தல் விவகாரம்; வடகொரியாவுடன் பேச்சுவார்த்தி நடத்தி தீர்வு காண விருப்பம்: ஷின்ஜோ அபே
குடிமக்கள் கடத்தல் விவகாரத்தில் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண விரும்புகிறோம் என ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே இன்று கூறியுள்ளார். #PrimeMinisterShinzoAbe
டோக்கியோ,
வடகொரியா நாடு அணு ஆயுத சோதனைகளை நடத்துவதற்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா. அமைப்பு அந்நாட்டிற்கு பொருளாதார தடைகளையும் விதித்தது. ஆனால் தொடர்ந்து வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வந்தது.
இந்த நிலையில், வருகிற மே இறுதியில் வடகொரிய அதிபர் கிம் ஜாம் உன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதேபோன்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், ஏப்ரல் இறுதியில் கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளார்.
வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் தென்கொரிய தேசிய புலனாய்வு துறை தலைவர் சூ ஹூன் உடன் ஜப்பான் பிரதமர் அபே சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர் கூறும்பொழுது, கடந்த காலங்களில் கடத்தப்பட்ட ஜப்பானியர்கள் விவகாரத்தில் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண விரும்புகிறோம். வடகொரியா தனது பேச்சினை செயலிலும் காட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.