”பேஸ்புக்கை டெலிட் செய்வதற்கான நேரம் இது” வாட்ஸ் அப் இணை நிறுவனர் டுவிட்டரில் பதிவு
”பேஸ்புக்கை டெலிட் செய்வதற்கான நேரம் இது” என வாட்ஸ்-அப் இணை நிறுவனர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருளாக உருவெடுத்துள்ளது.
சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்,
முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல்கள் முறைகேடாக எடுக்கப்படுவதாக வெளியான தகவல் உலகம் முழுவதும் சமூக வலைதள பயன்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வாட்ஸ் அப் நிறுவனத்தின் இணை நிறுவனரான பிரன் அக்டன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு உலகம் முழுவதும் டிரெண்ட் ஆகியுள்ளது. பிரன் அக்டன் தனது டுவிட்டர் பதிவில், “பேஸ்புக் கணக்கை டெலிட் செய்வதற்கான நேரம் இது” என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே #deletefacebook என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் டிரெண்டாக இருந்த நிலையில், வாட்ஸ் அப் இணை நிறுவனரின் கருத்து மேலும் இந்த விவாதத்துக்கு வலுசேர்த்துள்ளது.
ஸ்டான்ஃபோர்டு மாணவரான ஆக்டன், உக்ரைனில் குடியேறியவரான ஜேன் கோம் உடன் இணைந்து 2009-ல் வாட்ஸ் அப்பை உருவாக்கினார். ஆனால், கடந்த ஆண்டு புதிய நிறுவனம் ஒன்றை துவங்குவதற்காக வாட்ஸ் அப் நிறுவனத்தில் இருந்து விலகினார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 1,04,300 கோடி) க்கு கைப்பற்றியது நினைவிருக்கலாம். கடந்த மாதம் அக்டன் ”சிக்னல்” என்ற குறுஞ்செய்தி பகிரும் செயலியில் சுமார் 50 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளார்.
Related Tags :
Next Story