இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மியான்மர் சென்றார் சுஷ்மா சுவராஜ்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மியான்மர் சென்றுள்ளார். #SushmaSwaraj
நே பை தா,
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மியான்மர் சென்றார். மியான்மர் தலைநகர் நே பை தா சென்றடைந்த சுஷ்மா சுவராஜை, மியான்மருக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, மியான்மர் வெளியுறவுக்கொள்கை மந்திரி உ மியிண்ட் து உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மியான்மர் நாட்டு தலைவர்களை சுஷ்மா சுவராஜ் சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்து ஆலோசனை நடத்துவார் என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரக்கைன் மாகாணத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து மியான்மர் தலைவர்களுடன் சுஷ்மா ஆலோசிப்பார் என்று தெரிகிறது. ரக்கைன் மாகாணத்தில் ஏற்பட்ட பெரிய வன்முறையையடுத்து, சுமார் 6 லட்சம் ரோகிங்கிய அகதிகள், வெளிநாடுகளில் அகதிகளாக புகுந்துள்ளனர்.
இந்தியாவின் மிக முக்கிய அண்டைநாடான மியான்மர், இந்தியாவுடனான எல்லையை 1640 கி.மீட்டர் தூரத்துக்கு பகிர்ந்து உள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகாலந்து மற்றும் மணிப்பூர் மாநிலமும் மியான்மர் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், மியான்மருடான உறவு முக்கிய ஒன்றாக திகழ்கிறது. கடந்த டிசம்பர் மாதம், ரக்கைன் மாகாணத்திற்கு சுமார் 25 மில்லியன் டாலர் உதவி தொகையாக வழங்குவதாக இந்தியா அறிவித்தது நினைவிருக்கலாம்.
Related Tags :
Next Story