வலுக்கட்டாயமாக கற்பழித்த கணவரை கொலை செய்தார் மனைவி: மரண தண்டனை விதித்தது, சூடான் கோர்ட்டு


வலுக்கட்டாயமாக கற்பழித்த கணவரை கொலை செய்தார் மனைவி: மரண தண்டனை விதித்தது, சூடான் கோர்ட்டு
x
தினத்தந்தி 12 May 2018 12:00 AM GMT (Updated: 11 May 2018 9:17 PM GMT)

வலுக்கட்டாயமாக கற்பழித்த கணவரை கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை விதித்து சூடான் கோர்ட்டு உத்தரவிட்டது

ஓம்துர்மன், 

சூடான் நாட்டை சேர்ந்தவர், நவுரா உசேன். 16 வயதான நிலையில் இந்தப் பெண்ணை ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் இந்தப் பெண்ணுக்கோ படிப்பு முடித்து ஆசிரியை ஆக வேண்டும் என்பது கனவாக இருந்தது.

திருமணத்துக்கு பின்னர் 3 ஆண்டு காலம் நவுரா தன் அத்தை வீட்டில் தஞ்சம் அடைந்தார். அதன்பின்னர் தன் வீட்டுக்கு தந்திரமாக அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அங்கு சென்ற சில நாட்களில், அவரை உறவினர்கள் துணையுடன் கணவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

மறுநாளும் அவர், மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சித்தார். ஏற்கனவே ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த அந்தப் பெண், கணவரை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். அதன்பின்னர் அவர் தாய் வீட்டுக்கு போய்விட்டு, அங்கிருந்து போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார்.

இது தொடர்பாக அந்தப் பெண் மீது ஓம்துர்மன் நகர கோர்ட்டில் இஸ்லாமிய சட்டப்படி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இஸ்லாமிய சட்டதிட்டப்படி, கொலையாளியிடம் இருந்து, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு பெற சம்மதித்தால் கொலையாளி தண்டனைக்கு தப்பலாம், இழப்பீட்டை அவர்கள் ஏற்காவிட்டால், கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரையில், நவுரா உசேனின் கணவர் குடும்பத்தினர் இழப்பீடு பெற முன்வரவில்லை. அவர்கள் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து விட்டனர்.

இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

தண்டனையை எதிர்த்து நவுரா உசேன் மேல் முறையீடு செய்வதற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மனித உரிமை அமைப்புகள், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றன.

Next Story