காசா மரணம்: இஸ்ரேல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்; சீனா வேண்டுகோள்
அமெரிக்க தூதரக இடமாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் 59 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என சீனா இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. #LuKang
பெய்ஜிங்,
அமெரிக்க அரசு டெல் அவிவ் நகரில் இருந்த தனது தூதரகத்தினை சமீபத்தில் ஜெருசலேம் நகருக்கு இடமாற்றம் செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், எதிர்ப்பு தெரிவித்து காசா நகரவாசிகள் நேற்று காசா எல்லை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை இஸ்ரேல் படைகள் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதில் 59 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கடந்த 2014ம் ஆண்டு நடந்த காசா போருக்கு பின் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையேயான இந்த மிக பெரிய மோதலில் 2,400 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், இஸ்ரேல் அரசு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபற்றி அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி லு காங் கூறும்பொழுது, காசா எல்லையில் நடந்த வன்முறை சம்பவத்தில் அதிகளவில் உயிரிழப்புகள் நடந்துள்ளன என்பதனை நாங்கள் தீவிரம் ஆக கவனத்தில் கொண்டுள்ளோம்.
பொதுமக்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நாங்கள் இரு தரப்பினரையும் கேட்டு கொள்கிறோம். குறிப்பிடும்படியாக இஸ்ரேல் கட்டுப்பாட்டினை கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து பதற்றம் ஏற்படுவது மற்றும் மோதல் சூழ்நிலை நீளுவதை தவிர்க்க வேண்டும் என கூறினார்.