தென்கொரியாவுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை திடீரென ரத்து செய்தது வடகொரியா


தென்கொரியாவுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை திடீரென ரத்து செய்தது வடகொரியா
x
தினத்தந்தி 16 May 2018 2:49 AM GMT (Updated: 16 May 2018 2:49 AM GMT)

தென்கொரியாவுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது மீண்டும் கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்,

பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பிறகு வடகொரியா வரவேற்கும் படியான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக வடகொரியா அறிவித்தது. தொடர்ந்து, அமெரிக்க அதிபருடனான சந்திப்புக்கு முன்னதாக அணு ஆயுத சோதனை மையங்களை அழிப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தென்கொரியா உடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி, வடகொரியா உடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. தென்கொரியா-அமெரிக்கா நாடுகளின் கூட்டு பயிற்சி அத்துமீறல் என தெரிவித்துள்ள வடகொரியா, பேச்சுவார்த்தையை தற்காலிகமாக ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்து உள்ளது. 

வடகொரியாவின் இந்த திடீர் அறிவிப்பு கொரிய தீபகற்பத்தில் அண்மை காலமாக இருந்துவந்த சுமூக நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story