அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மசூதி கட்டி கொடுத்த இந்திய தொழிலதிபர்


அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மசூதி கட்டி கொடுத்த இந்திய தொழிலதிபர்
x
தினத்தந்தி 18 May 2018 12:03 PM GMT (Updated: 18 May 2018 12:03 PM GMT)

அமீரகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழுகை நடத்த இந்திய தொழிலதிபர் ஒருவர் மசூதி ஒன்றை கட்டி கொடுத்து உள்ளார்.

கேரள மாநிலம், காயங்குளத்தைச் சேர்ந்தவர் ஷாஜி செரியன். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த இவர், 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்குச் சென்று உழைத்து தொழிலதிபராக உயர்ந்தவர். தற்போது, பல கோடிகளுக்கு அதிபதியான ஷாஜி, வளைகுடாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில், அமீரகத்தில் உள்ள பியூஜைரா  எனும் நகரத்தில் பணிபுரியும் பல்வேறு தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள், தொழுகைக்காக பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வந்ததை ஷாஜி அறிந்தார். மேலும், ஒருமுறை மசூதிக்கு சென்று வர தொழிலாளர்களுக்கு 20 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.400) தேவை. இதனைத் தொடர்ந்து, பியூஜைரா நகரில் தொழிலாளர்களுக்கு என மசூதி ஒன்றை கட்டித் தர ஷாஜி முடிவெடுத்தார். இந்திய மதிப்பு 2 கோடி ரூபாய் செலவில் அழகிய மசூதி ஒன்றை ஷாஜி கட்டத் தொடங்கினார். இந்த மசூதியில் ஒரே சமயத்தில் 950 பேர் வரை தொழுகை செய்ய முடியும்.

கிறிஸ்துவரான ஒருவர் மசூதி கட்டுவதை அறிந்த உள்ளூர் அதிகாரிகள் வியப்படைந்ததுடன், மசூதிக்கு தேவையான மின்சாரம், குடிநீர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தந்தனர். அதிகாரிகளிடமிருந்து இப்படி ஒரு உதவியை எதிர்பாராத ஷாஜி, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஷாஜியின் செயலைக் கண்டு திகைத்த உள்ளூர் அரேபியர்களும் நிதியுதவி செய்ய முன் வந்தனர். 

ஆனால், ஷாஜி அவர்களின் நன்கொடைகளை மறுத்து, தனது சொந்த செலவிலேயே மசூதியை எழுப்பினார். 

இதுகுறித்து ஷாஜி செரியன் கூறியதாவது:-

சொற்ப சம்பளமே வாங்கும் தொழிலாளர்கள் காசு செலவழித்து தொழுகைக்கு செல்வதைப் பார்த்தேன். அருகில் மசூதி இருந்தால் அவர்கள் சந்தோசப்படுவார்களே என என் உள்மனம் கூறியது. என் நோக்கத்தைப் புரிந்துகொண்ட பலரும் மசூதி கட்டுமானத்துக்கான கல், செங்கல், பெயிண்ட் போன்றவற்றை வாங்கித் தர முன் வந்தனர். ஆனால், என் சொந்த செலவில் இந்த மசூதியைக் கட்டவே நான் விரும்பினேன். அதனால், நன்கொடைகளை ஏற்கவில்லை. மதம், இனம், ஜாதி அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து பார்ப்பதில்லை. எல்லா மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே என் ஆசை’ என தெரிவித்துள்ளார்.

Next Story