ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி
x
தினத்தந்தி 19 May 2018 10:45 PM GMT (Updated: 19 May 2018 7:34 PM GMT)

ஆப்கானிஸ்தான் நாட்டில், ஜலாலாபாபாத் நகரில் நேற்று முன்தினம் ரமதான் கோப்பைக்கான இரவு நேர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

காபூல்,

கிரிக்கெட் போட்டியை ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாகமாகப் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. பெரும் கரும்புகை மண்டலமும் உருவானது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அனைவரும் உயிர் பிழைப்பதற்காக நாலாபுறமும் ஓடத்தொடங்கினர். இருப்பினும் இந்த குண்டுவெடிப்பில், 8 பேர் உடல் சிதறி பலியாகினர். 45 பேர் காயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து சுற்றி வளைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலியானவர்களில் இந்த கிரிக்கெட் போட்டியின் அமைப்பாளர் இதாயத்துல்லா ஜாகீர், ஜலாலாபாத் துணை மேயர் டாக்டர் நெக்மல் உள்ளிட்டவர்களும் அடங்குவார்கள்.

குண்டுவெடிப்பை நேரில் பார்த்த சவுக்கத் ஜமான் என்பவர் கூறும்போது, ‘‘வர்ணனையாளர்கள் பெட்டி அருகில்தான் முதலில் குண்டுவெடித்தது’’ என்றார். காயம் அடைந்தவர்களில் ஒருவரான சையத் அன்வர், சில அதிகாரிகள் மைதானத்திற்குள் நுழைந்ததைத் தொடர்ந்துதான் குண்டு வெடித்தது என்று குறிப்பிட்டார்.

குண்டுவெடிப்பு நடந்த போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் கரீம் சாதிக் மைதானத்தில் இருந்து இருக்கிறார். ஆனால் அவர் காயமின்றி தப்பினார். இருப்பினும் அவரது நண்பர்கள் சிலர் கொல்லப்பட்டு விட்டதாகவும், சிலர் காயம் அடைந்து உள்ளதாகவும் அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த குண்டுவெடிப்பில் தங்களுக்கு தொடர்பு எதுவும் கிடையாது என தலீபான்கள் மறுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story