‘எச்–4 விசா’ விவகாரம்: இறுதி முடிவு எடுக்கவில்லை அமெரிக்கா அறிவிப்பு


‘எச்–4 விசா’ விவகாரம்: இறுதி முடிவு எடுக்கவில்லை அமெரிக்கா அறிவிப்பு
x
தினத்தந்தி 19 May 2018 11:00 PM GMT (Updated: 19 May 2018 7:42 PM GMT)

இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ‘எச்–4 விசா’ விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அமெரிக்கா அறிவித்து உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்கிறவர்களுக்கு ‘எச்–1’ பி விசா வழங்கப்படுகிறது. அந்த விசாவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்–4’ விசா கொடுத்து, அங்கேயே வேலை பார்க்கும் திட்டத்தை ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது கொண்டு வந்தார்.

அதை நீக்கிவிட தற்போதைய டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பெருமளவில் இந்தியர்கள் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உருவாகி உள்ளது.

ஆனால் ஒபாமா காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை தொடர வேண்டும் என்று இந்திய வம்சாவளி எம்.பி., பிரமிளா ஜெயபால் தலைமையில் 130 எம்.பி.க்கள் அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி கிறிஸ்ட்ஜென் நீல்சனிடம் மனு அளித்தனர்.

இந்தநிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பிலிப் ஸ்மித், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘‘சட்டம் இயற்றுகிற நடைமுறை முடிகிற வரையில், ‘எச்–4’ விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட மாட்டாது. அமெரிக்காவில் அமெரிக்கர்களையே பணி அமர்த்த வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவை அமல்படுத்தும் விதத்தில், நிறைய கொள்கைகள், ஒழுங்குமுறைகள் மாற்றப்பட உள்ளன. அதில் வேலை வாய்ப்பு அடிப்படையில் விசா வழங்கும் திட்டமும் அடங்கும்’’ என்று குறிப்பிட்டார்.

எனவே அமெரிக்க வாழ் இந்தியர்கள் தற்காலிகமாக நிம்மதி அடையலாம்.


Next Story