அருணாசலபிரதேச எல்லையையொட்டி தங்கச்சுரங்கம் தோண்டுகிறது சீனா


அருணாசலபிரதேச எல்லையையொட்டி தங்கச்சுரங்கம் தோண்டுகிறது சீனா
x
தினத்தந்தி 20 May 2018 10:45 PM GMT (Updated: 20 May 2018 8:08 PM GMT)

அருணாசலபிரதேச எல்லையையொட்டி தங்கச்சுரங்கம் தோண்டும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது.

பீஜிங்,

இந்தியாவின் அண்டை நாடான சீனா, தனது நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள அருணாசலபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. அருணாசலபிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது.

இதுதொடர்பாக அத்துமீறி இந்தியா மீது சீன படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அருணாசலபிரதேச எல்லையில் எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபரை சந்தித்து பேசியதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அருணாசலபிரதேச எல்லையையொட்டி சீனா தங்கச்சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி உள்ளது.

இந்த சுரங்கத்தில் தங்கம் தவிர வெள்ளி மற்றும் பல விலைமதிப்புள்ள கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.400 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று சீன பத்திரிகை ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் பணிக்காக அங்கு சாலை வசதிகள் உள்ளிட்ட இதர உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஏற்கனவே இந்தியா–சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில், அருணாசலபிரதேச எல்லையையொட்டி சீனா தங்கச்சுரங்கம் தோண்டுவது பிரச்சினையை மேலும் வலுப்படுத்தி உள்ளது.


Next Story