தேயிலை துகள்களால் நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும்! புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு


தேயிலை துகள்களால் நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும்! புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 22 May 2018 10:36 AM GMT (Updated: 22 May 2018 10:36 AM GMT)

தேயிலையிலிருந்து பெறப்படும் குவாண்டம் துகள்கள் மூலம் நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #LungCancer



 தேயிலையிலிருந்து பெறப்படும் துகள்கள் மூலமாக நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்கமுடியும் என அறிவியலாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள். பிரிட்டனின் ஸ்வான்சி பல்கலைக் கழகம், தமிழ்நாட்டின் கே.எஸ் ரங்கசாமி கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரியவந்து உள்ளது. மனித தலைமுடியின் அகலத்தில் 4,000ல் ஒரு பகுதியாக இருக்கும் குவாண்டமானது, புற்றுநோய் செல் சுவர்களின் நானோ துளைகளுக்குள் புகுந்து அவற்றை அழிக்கிறது. புற்றுநோய் செல்கள் பெருக வேண்டும் என்ற செய்தியை வைத்திருக்கும் டிஎன்ஏவை அழிக்கிறது, அத்தகையை செல்களின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.  


இந்த கண்டுபிடிப்பு நுரையீரல் புற்றுநோய் சிகிச்சையில் மிக முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பான மருந்து பயன்பாட்டிற்கு வருவதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் அறிவியலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.  

இந்த துகள்களை வேதியியல் ரீதியாக உருவாக்கலாம், ஆனால் சிக்கலானதாகவும், விலையுயர்ந்ததாகவும், நச்சுத்தனையானதாகவும், பக்க விளைவு கொண்டதாக இருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆய்வின் தலைவர் பிரிட்டனின் ஸ்வான்சி பல்கலைக் கழக டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து பேசுகையில், செயற்கையான முறையில் குவாண்டம் துகள்களை உருவாக்க ஒரு மைக்ரோகிராமிற்கு 250 பவுண்ட் முதல் 500 பவுண்ட் வரை உற்பத்தி செலவு ஏற்படுகிறது. இதுவே நாங்கள் தேயிலையை பரிசோதனை செய்வதற்கு முக்கிய காரணமாகும். 

தேயிலையில் இருந்து இயற்கையான முறையில் எடுக்கப்படும் குவாண்டம் துகள்களுக்கு ஒரு மைக்ரோகிராம் 10 பவுண்ட் மட்டுமே செலவு. 
அதேவேளையில் கேன்சர் செல்களை சுற்றிலும் இருக்கும் நல்ல செல்களை அழிக்காது. குவாண்டமானது புற்றுநோய் செல் சுவர்களின் நானோ துளைகளுக்குள் புகுந்து அவற்றை அழிக்கிறது. இப்போதைக்கு ஆய்வுக்கூடத்தில் மட்டுமே உற்பத்தி செய்கிறது. தொழிற்சாலையில் தயாரிக்க வேண்டுமானால் அதற்கு சில காலம் பிடிக்கும். எல்லாம் சரியாக நகர்ந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மனிதர்களுக்கு சிகிச்சையை மேற்கொள்ளலாம். 10 ஆண்டுகளில் இந்த சிகிச்சையானது உலகம் முழுவதும் எளிதாக கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது எனக் கூறி உள்ளார். 

வேல்ஸ் புற்றுநோய் நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு பிரிவு தகவலின்படி நுரையீரல் புற்றுநோய் 4 முக்கிய புற்றுநோய்களில் முக்கியமானது. வேல்ஸ் மற்றும் உலக முழுவதும் இதனால் பாதிப்பு உள்ளது. வேல்ஸில் ஒவ்வொரு ஆண்டும் மார்பக மற்றும் குடல் புற்றுநோயைவிட அதிகமான உயிரிழப்புக்கு நுரையீரல் புற்றுநோயே காரணமாக உள்ளது. நுரையீரல் புற்றுநோய் பாதிப்பவர்களில் 6.5 சதவிதபேர் மட்டுமே  5 மற்றும் அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் வரையில் உயிர் வாழ்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story