டிரம்ப், கிம் உச்சி மாநாட்டை தொடர்ந்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு


டிரம்ப், கிம் உச்சி மாநாட்டை தொடர்ந்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு
x
தினத்தந்தி 13 Jun 2018 10:45 PM GMT (Updated: 13 Jun 2018 7:23 PM GMT)

சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் டிரம்பும், கிம்மும் சந்தித்து பேசியதை தொடர்ந்து, அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்து உள்ளது.

லாகூர்,

சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசுவார்களா, மாட்டார்களா என உலகமே கேள்விக்குறியுடன் காத்திருந்தது.

ஆனால் நிச்சயித்தபடி அந்த சந்திப்பு நேற்று முன்தினம் நடந்துவிட்டது. அதில் கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கும், அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவதற்கும் வடகொரியா சம்மதம் தெரிவித்து, அமெரிக்கா உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பு, உலக அளவில் வரவேற்பை பெற்று உள்ளது.

இதே போன்று இந்தியாவும் தங்களுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்து, அழைப்பு விடுத்து உள்ளது.

2016–ம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்துதான் பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவிட்டது.

இப்போது இரு துருவங்களான டிரம்பும், கிம்மும் சந்தித்து பேசி இருப்பதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் (நவாஸ்) தலைவரும், பிரதமர் வேட்பாளருமான ஷாபாஸ் ஷெரீப் இது தொடர்பாக டுவிட்டரில் தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டு உள்ளார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:–

கொரியப்போர் தொடங்கியதில் இருந்து இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று பகைமை கொண்டன. ஒருவருக்கு ஒருவர் அணு ஆயுதங்களை பயன்படுத்தப்போவதாக மிரட்டல் விடுத்து வந்தன.

அணு ஆயுத முனையில் இருந்து அவர்கள் பேச்சுவார்த்தைக்கு திரும்ப முடிந்திருக்கிறது என்றால், இந்தியாவும் பாகிஸ்தானும் அதே போன்று பேச்சுவார்த்தையை தொடங்காமல் இருப்பதற்கு காரணமே இல்லை.

இந்திய ஆக்கிரமிப்புகளை எதிர்க்கிற மக்களைக் கொண்டு உள்ள காஷ்மீர் விவகாரத்தில் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்கலாம்.

நமது பிராந்தியத்தில் விரிவான சமரச பேச்சு நடத்துவதற்கு இது ஏற்ற நேரம் ஆகும்.

ஐ.நா. தீர்மானத்தின்படி காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

எங்கள் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், இந்த பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story