அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில் வடகொரியா மீதான பொருளாதார தடை நீக்கப்படாது
அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில், வடகொரியா மீதான பொருளாதார தடை நீக்கப்படாது என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.
சியோல்,
இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்தது. முதலில் நேருக்கு நேரும், பின்னர் தூதுக்குழுவினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு தலைவர்களும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்.
அந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சம், கடந்த ஏப்ரல் மாதம் 27–ந் தேதி, மேற்கொள்ளப்பட்ட பன்முன்ஜோம் உடன்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிற விதத்தில், கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு பாடுபடும் என்பது ஆகும்.
அதே நேரத்தில் வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடும் விதம்பற்றி ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை, மேலும் வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுகிற நடைமுறைகளை எப்படி சரிபார்த்து அறிவது என்பது குறித்தும் கூறப்படவில்லை என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், டிரம்ப், கிம் சந்திப்பு பற்றியும், அவர்களது பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் தோழமை நாடான தென்கொரியாவிடம் எடுத்துக்கூறுவதற்காக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ சியோல் சென்றார்.அங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து தென்கொரிய வெளியுறவு மந்திரி, ஜப்பான் வெளியுறவு மந்திரி ஆகியோருடன் கூட்டாக நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சிங்கப்பூர் உச்சி மாநாடு, அமெரிக்கா–வடகொரியா உறவில் ஒரு திருப்பு முனையாக அமைந்து உள்ளது.
வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும். அது சரிபார்க்கத்தக்கதாக இருக்கவேண்டும். மீண்டும் மீட்டெடுக்க முடியாததாக இருக்க வேண்டும். இதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட்டு, அதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வரையில் வடகொரியா மீதான பொருளாதார தடை நீக்கப்படமாட்டாது. தடை தொடரும்.அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார். வடகொரியா முழுமையாக அணு ஆயுதங்களை கைவிட்டு விட்டதை நாங்கள் பார்க்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார தடைகளில் இருந்து அந்த நாடு நிவாரணம் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா படிப்படியாக சலுகைகள் வழங்கும் என்று வடகொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை மைக் பாம்பியோ நிராகரித்தார்.
அதே நேரத்தில் வடகொரியாவிடம் இருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இனி இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.