ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் கோலாகலம் தலீபான்களும், படை வீரர்களும் கட்டித்தழுவி வாழ்த்து


ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் கோலாகலம் தலீபான்களும், படை வீரர்களும் கட்டித்தழுவி வாழ்த்து
x
தினத்தந்தி 16 Jun 2018 11:00 PM GMT (Updated: 16 Jun 2018 8:10 PM GMT)

ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரம்ஜான் நோன்புக்காலத்தையொட்டி அதிபர் அ‌ஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார்.

காபூல்,

தலீபான்கள் முதல் முறையாக  3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தனர்.

அந்தப் போர் நிறுத்தத்தை இரு தரப்பினரும் கடைப்பிடித்து வருவதால் அங்கு துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்புகள் இல்லாமல் கடந்த 24 மணி நேரமாக அமைதி நிலவுவதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தான் உள்துறை துணை மந்திரி மசூத் அஸிஜி இதை உறுதி செய்தார். அவர் இதுபற்றி குறிப்பிடுகையில், ‘‘நாடு முழுவதும் போர் நிறுத்தம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக எந்த தாக்குதலும் நடைபெறவில்லை’’ என கூறினார்.

லோகர் மாகாணம், காபூல், ஜாபுல், மைதான் வார்டாக் பகுதிகளில் இதுவரை இல்லாத அபூர்வ நிகழ்வாக தலீபான்களும், ஆப்கானிஸ்தான் படைவீரர்களும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். குண்டூஸ் உள்ளிட்ட நகரங்களில் தலீபான்கள், போலீசாரை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான காட்சிகள் அங்கு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

ஹெல்மாண்ட், காந்தகார், ஜாபுல் மாகாண கவர்னர்கள், இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை கடைப்பிடித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எந்தவொரு தாக்குதலும் நடைபெற வில்லை என்றும் கூறினர்.

ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது பற்றி கல்லூரி மாணவரான காயிஸ் லிவால் கருத்து தெரிவிக்கையில், ‘‘ இதுதான் மிகவும் அமைதியான முறையில் நடந்த ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் ஆகும். முதல் முறையாக நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தோம். அந்த சந்தோ‌ஷத்தை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை’’ என்று கூறினார்.


Next Story