'நான் நல்லா இருக்கேன் ஆனா ரொம்ப குளிருது' - தாய்லாந்தின் குகையில் இருந்து சிறுவர்களின் கடிதம்


நான் நல்லா இருக்கேன் ஆனா ரொம்ப குளிருது - தாய்லாந்தின் குகையில் இருந்து  சிறுவர்களின் கடிதம்
x
தினத்தந்தி 7 July 2018 7:32 AM GMT (Updated: 7 July 2018 7:32 AM GMT)

'நாங்கள் நலமாக உள்ளோம் ஆனா ரொம்ப குளிருது என தாய்லாந்தின் குகையில் இருந்து சிறுவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

தாய்லாந்தில் நீர் தேங்கியிருக்கும் குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளருக்கு நீரில் மூழ்க தெரியாது என்பதால் ஓர் இரவில் அவர்களை மீட்டுவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் தம் லுவாங் குகையின் ஒரு பகுதியில், ஏறக்குறைய இரண்டு வாரங்களாக சிக்கியிருக்கும் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை   மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.உயிருடன் இருப்பதாக இங்கிலாந்தை  சேர்ந்த 2 நீர் மூழ்கி வீரர்கள் கடந்த 9-ம் தேதி உறுதி செய்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் விரைந்து மீட்கும் பணியில் தாய்லாந்தின் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குகைக்குள் அவர்கள் சென்ற பிறகு பெய்த மழையால், அக்குகையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர்கள் அங்கு சிக்கிக்கொண்டுள்ளனர். முன்னதாக, சிறுவர்களுக்கு பிரான வாயு சிலிண்டர்களை வழங்க சென்ற முக்குளிப்பவர் ஒருவர் திரும்பும் வழியில் உயிரிழந்தார்.

சிறுவர்கள் காணாமல் போன 10 நாட்களுக்கு பிறகு, மீட்புப்பணியில் ஈடுபடும் பிரிட்டன் நீர் மூழ்கி வீரர்களால் குகையில் கண்டுபிடிக்கப்பட்டனர். குகையின் நுழைவில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் ஒரு பாறையின் இடுக்கில் உள்ள சிறு அறையில் உள்ளனர்.

சிறுவர்களுக்கு தேவையான உணவு, பிராண வாயு மற்றும் மருத்துவ உதவிகளை தாய்லாந்து மற்றும் சர்வதேச நீர்மூழ்கி  குழுக்கள் வழங்கி வருகின்றனர்.

குகையில் சிக்கிக் கொண்டுள்ள சிறுவர்களுக்கு, நடக்க போதுமான வலிமை இருப்பதாகவும், ஆனால் நீச்சல் அடித்து அவர்களால் பாதுகாப்பாக வெளிவர முடியாது என்று   சியாங் ராய் ஆளுநர் நிருபர்களிடம் கூறி உள்ளார்,

மேலும் அவர் கூறும் போது 

சிறுவர்களின் உடல்நலம் சாதாரணமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு நீரில் மூழ்குவது எப்படி என்பதோடு மூச்சு பயிற்சி மற்றும் நுட்பங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

மழை பொழிய தொடங்கினால் ஓர் இரவில் அவர்களை மீட்க முயற்சி எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, "தற்போது இந்த நேரத்தில் சிறுவர்களால் நீரில் மூழ்க  முடியாது"  சிறுவர்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் சுவாசிக்கும் காற்று நன்றாக உள்ளது

சிறுவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர், ஆனால் அது அவர்களிடம் போய் சென்றதா என்பது தெரியவில்லை. 

குகையில் அவர்கள் சிக்கியிருக்கும் இடத்தை நேரடியாக சென்றடையலாம் என்ற நம்பிக்கையில், மீட்பு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட துளைகளையிட்டனர். அதில் 18 துளைகள் உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மிக ஆழமானது என்று பார்த்தால் 400 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது.

ஆனால், இதன் மூலம் சிறுவர்களை மீட்க முடியுமா என்று தெரியவில்லை . 600 மீட்டர் கீழே இருப்பதாக நம்பப்படுகிறது என கூறினார்.

 குகையினுள் இருக்கும் பிராண வாயுவின் அளவு குறித்து கவலை எழுந்த வண்ணம் உள்ளது. சாதாரணமாக 21 சதவீதமாக இருக்க வேண்டிய பிராண வாயு, 15 சதவீதமாக குறைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

"சிறுவர்களை மீட்பதற்கான சிறந்த திட்டத்துக்கு முயற்சித்து வருகிறோம், குறைந்த அபாயம் இருக்கும் நேரத்தில், அவர்களை வெளியே கொண்டுவர முயற்சிப்போம்" என்று ஆளுநர் நரோங்சக் கூறினார்.

கடந்த சில நாட்களாக மழை பொழிவது நின்றுள்ளதால் மீட்பு பணிகள் செய்ய முடிவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மீட்பு பணியாளர்கள் சிறுவர்களை சென்றடைய குகையின் பல பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமையன்று தண்ணீர் வெளியேற்றப்படுவது 12 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டதையடுத்து, குகைக்குள் 10 சென்டி மீட்டர் அளவிற்கு நீரின் அளவு உயர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமையன்று கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், குகையில் அதிக வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழைக்காலம் முடியும் வரை குகைக்குள் சிறுவர்களை காத்திருக்க வைக்கலாம் என்று அதிகாரிகள் முதலில் முடிவு செய்திருந்தனர். ஆனால், அப்படி செய்தால் அவர்கள் 4 மாதங்கள் வரை அங்கு சிக்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தற்போது  மேலும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ”கனமழை எச்சரிக்கை கரணமாக இன்று மீட்பு பணி நடைபெறாது” என்று  சியாங் ராய் மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

'நான் நல்லா இருக்கேன் ஆனா ரொம்ப குளிருது' குகையில் இருந்து  தாய்லாந்து சிறுவன்  ஒருவன் கடிதம்  எழுதி உள்ளான். அதில் சிறுவன் நான் நன்றாக இருக்கிறேன் காற்று கொஞ்சம் குளிராக இருக்கிறது,ஆனால் கவலைப்படாதே.   இருப்பினும், என் பிறந்தநாள் விருந்து ஏற்பாடு செய்வதற்கு   மறக்காதே என ஒரு சிறுவன் கூறி உள்ளான்

அம்மாவும் அப்பாவும், தயவு செய்து கவலைப்படாதீர்கள் , நான் நன்றாக இருக்கிறேன். என மற்றொரு  சிறுவன் எழுதி உள்ளான்

மிக் என்ற சிறுவன் கவலைப்படாதீர்கள்  நான் எல்லோரையும்  மிஸ் செய்கிறேன். தாத்தா, மாமா, அம்மா அப்பா, மற்றும் உடன்பிறப்புகள் நான் உங்களை நேசிக்கிறேன்.  நான் உள்ளே இருப்பது சந்தோஷமாக இருக்கிறேன்,கடற்படை எங்களை  நன்றாக கவனித்து கொள்கிறது. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என கூறி உள்ளார்

குகைக்குள் சிக்கியுள்ள பயிற்சியாளர், “என்னை மன்னித்துவிடுங்கள்! பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வேன். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என கடிதம் எழுதியுள்ளார்  

Next Story