அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி: இந்தியர் அமுல் தாபருக்கு வாய்ப்பு நழுவியது, மூவர் பட்டியலில் பெயர் இல்லை என தகவல்


அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி: இந்தியர் அமுல் தாபருக்கு வாய்ப்பு நழுவியது, மூவர் பட்டியலில் பெயர் இல்லை என தகவல்
x
தினத்தந்தி 7 July 2018 11:00 PM GMT (Updated: 7 July 2018 6:54 PM GMT)

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கான பட்டியலில் இந்தியர் அமுல் தாபருக்கு வாய்ப்பு நழுவியுள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அந்தோணி கென்னடி (வயது 81), இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் ஏற்படுகிற காலி இடத்தை நிரப்புவதற்கான பணியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு உள்ளார்.

முதலில் அவர் தகுதியான 25 பேரது பட்டியலை தயார் செய்தார். அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபரும் (49) இடம் பிடித்து இருந்தார்.

அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் கடந்த 2-ந் தேதி டிரம்ப் நேர்காணல் நடத்தினார். அதைத் தொடர்ந்து மேலும் 3 நீதிபதிகளிடமும், 3 தனி நபர்களிடமும் அவர் நேர்காணல் நடத்தினார்.

இப்போது 3 பேரைக் கொண்ட இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் இந்தியர் அமுல் தாபர் பெயர் இல்லை என்றும் ஊடக தகவல் ஒன்று நேற்று கூறியது. அந்த பட்டியலில் பிரெட் கவனாக், எமி கோனி பேரட் மற்றும் ரேமண்ட் கெத்லெட்ஜ் ஆகிய 3 பேரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளதாக தேசிய பொது வானொலி செய்தி கூறுகிறது. இந்த 3 பேரில் முதல் 2 பேரில் ஒருவரை டிரம்ப் தேர்வு செய்யலாம் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிரம்ப் ஓரிரு நாளில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமுல் தாபர், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கான தேர்வில் வாய்ப்பை நழுவ விட்டிருப்பது இது 2-வது முறை ஆகும். ஆன்டனின் ஸ்கேலியா என்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி 2016-ம் ஆண்டு இறந்தபோது, முதல் கட்ட பரிசீலனை பெயரில் அமுல் தாபர் பெயர் இடம் பெற்றிருந்தது. அப்போது நீல் கோர்சச் என்பவரை டிரம்ப் நியமனம் செய்து விட்டார்.

Next Story