அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டது கவுரவம் அளிக்கிறது; பிரெட் கவனாக்
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டது கவுரவம் அளிக்கிறது என பிரெட் கவனாக் கூறியுள்ளார். #USSupremeCourtJudge
வாஷிங்டன்,
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அந்தோணி கென்னடி. சமீபத்தில் இவர் ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டார். இதனால் காலியாகும் அந்த பதவியில் பணியமர்த்துவதற்காக 25 நீதிபதிகள் கொண்ட பெயர் பட்டியல் தயாரானது.
அதில் இருந்து பிரெட் கவனாக் (வயது 53) என்பவரை அதிபர் டிரம்ப் நீதிபதியாக தேர்வு செய்துள்ளார். அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் தனது மனைவி ஆஷ்லே மற்றும் மார்கரெட் மற்றும் லிசா ஆகிய 2 மகள்களுடன் நீதிபதி கவனாக் வசித்து வருகிறார்.
இவர் யேல் கல்லூரி மற்றும் யேல் சட்ட பள்ளியில் சட்ட படிப்பில் பட்டப்படிப்பு முடித்துள்ளதுடன் உச்ச நீதிமன்ற நீதிபதியான கென்னடிக்கு கீழ் பணியாற்றி உள்ளார். கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2006ம் ஆண்டில் இருந்து கவனாக் பதவி வகித்து வருகிறார்.
அவர் நீதிபதியாவதற்கு முன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தில் வழக்கறிஞர் மற்றும் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி பின்னர் அதிபருக்கு உதவியாளராக ஆனார்.
இதுபற்றி கவனாக் கூறும்பொழுது, உச்ச நீதிமன்றத்தில், கென்னடி பணியாற்றிய பதவியில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு அதிகம் கவுரவிக்கப்பட்டு உள்ளேன் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், ஒரு சுதந்திர நீதி அமைப்பு என்பது நமது அரசியலமைப்பு குடியரசிற்கு மகுடம் சூட்டும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். நாளை முதல் செனட் உறுப்பினர்களை சந்திக்க தொடங்குவேன். ஒவ்வொரு செனட் உறுப்பினரிடமும் அரசியலமைப்பினை மதிக்கிறேன் என கூறுவேன் என்று கூறியுள்ளார்.
செனட் உறுப்பினர்களால் உறுதி செய்யப்படும் ஒவ்வொரு விசயமும் திறந்த மனதுடன் கையாளப்படும். அமெரிக்காவின் அரசியலமைப்பு மற்றும் அமெரிக்க சட்ட விதிகளை பாதுகாக்க எப்பொழுதும் முழு முயற்சியுடன் செயல்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.