மோர்சி ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் வன்முறை : எகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை
எகிப்து நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெருமைக்குரியவர் மோர்சி.
கெய்ரோ,
2013–ம் ஆண்டு மோர்சியை ஆட்சியில் இருந்து அகற்ற ராணுவம் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராகவும், மோர்சிக்கு ஆதரவாகவும் கெய்ரோவில் பெருமளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்தது. தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டு கூட்டம் விரட்டியடிக்கப்பட்டது.
இந்த வன்முறையில் 817 பேர் பலியாகினர்.
அதன்பிறகு மோர்சி அரசு அகற்றப்பட்டது. அவரது சகோதரத்துவ கட்சி தடை செய்யப்பட்டது.
இந்த வன்முறை தொடர்பாக 75 பேர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து எகிப்து கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.
எகிப்து நாட்டு சட்டப்படி மரண தண்டனை விதிக்கிற கைதிகளுக்கு உடனே தண்டனையை நிறைவேற்றி விட முடியாது.
இஸ்லாமிய மத தலைமையான கிராண்ட் முப்தியின் ஒப்புதலை பெற வேண்டும்.
எனவே 75 பேரின் மரண தண்டனை தீர்ப்பு, கிராண்ட் முப்தி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் தண்டிக்கப்பட்டு உள்ளவர்கள் மேல் முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.