புயல் தாக்கியது : ஜப்பானில் பலத்த மழை ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின


புயல் தாக்கியது : ஜப்பானில் பலத்த மழை ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின
x
தினத்தந்தி 29 July 2018 11:30 PM GMT (Updated: 29 July 2018 8:35 PM GMT)

டோக்கியோ மற்றும் நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கடும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் ‘ஜாங்டரி’ புயல் நேற்று தாக்கியது. இதனால் தலைநகர் டோக்கியோ மற்றும் நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கடும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மணிக்கு 90 கி.மீ. முதல் 126 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

நேற்று இரண்டாவது நாளாக ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ரெயில் சேவையும் பல இடங்களில் ரத்து செய்யப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. ஒகயாமா, ஹிரோஷிமா மாகாணங்களில் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

புயல், மழை தொடர்பான சம்பவங்களில் 16 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

கனகவா மாகாணத்தில் ஒருவர் காணாமல் போய்விட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஷோபரா நகரில் 36 ஆயிரம் மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேற்கு ஜப்பானில் குரே உள்ளிட்ட நகரங்களில் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.


Next Story