வைரங்களுக்காக நாடு கடத்தப்படும் யானைகள்!


வைரங்களுக்காக நாடு கடத்தப்படும் யானைகள்!
x
தினத்தந்தி 4 Aug 2018 12:19 PM GMT (Updated: 4 Aug 2018 12:19 PM GMT)

தென்ஆப்பிரிக்காவில் வைரச் சுரங்கத்துக்காக யானைகள் நாடு கடத்தப்படுகின்றன.

தென்ஆப்பிரிக்காவில் தங்களுக்குச் சொந்தமான இயற்கைக் காப்பகத்தில் இருந்து 200 யானைகளை அண்டை நாடான மொசாம்பிக்கில் உள்ள பூங்காவுக்கு இடம்மாற்றும் நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதாக வைரச் சுரங்கத் தொழில் நிறுவனமான டீ பீர்ஸ் தெரிவித்திருக்கிறது.

யானைகள் அதிகமாக இருக்கும் வெனிஷியா லிம்போபோ காப்புக்காடுகளில் இருந்து, மொசாம்பிக்கின் ஜினாவே தேசியப் பூங்காவுக்கு பீஸ் பார்க்ஸ் பவுண்டேசன் என்ற அமைப்பின் உதவியுடன் இந்த யானைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

சுமார் 1500 கி.மீ. தொலைவுக்கு யானைகளை நாடு கடந்து கொண்டு செல்வது மிகவும் கடினமான பணியாகும்.

மொசாம்பிக் நாட்டில் 1992-ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில் யானைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

அந்தப் போரில் யானைகள் அழிக்கப்பட்டதோடு, வேட்டையாடப்படுவதாலும் மொசாம்பிக்கில் சமீபத்திய ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

முதல்கட்டமாக 60 யானைகளை அனுப்பும் பணியைத் தொடங்கியிருப்பதாக டி பீர்ஸ் கூறுகிறது. மயக்கமருந்து செலுத்தப்பட்ட யானைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு எல்லை கடந்து கொண்டு செல்லப்படுகின்றன.

சீனாவில் அதிகரித்துவரும் யானைத் தந்தங்களின் தேவைக்காக கடந்த 2010-ம் ஆண்டு முதல் மொசாம்பிக் நாட்டில் யானைகள் அதிக அளவில் வேட்டையாடப்படுவதும், யானைகளின் எண்ணிக்கை பாதியளவுக்குக் குறைந்து விட்டதற்குக் காரணம் என அஞ்சப்படுகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த செசில் ரோட்ஸ் என்பவரால் டீ பீர்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டது. சமீபகாலம் வரை சர்வதேச அளவில் வைர வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நிறுவனமாக இது திகழ்ந்தது.

வைரங்களுக்காக யானைகளை வதைக்கலாமா? 

Next Story