ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் திருமணம்
அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா திருமணம் செய்து கொண்டுள்ளதாக அவரது உறவினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
29 வயதாகும் ஹம்சா பின்லேடன், அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் முஹம்மது அட்டாவின் மகளை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த சடங்கானது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வைத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹம்சா திருமணம் செய்துள்ள மணப்பெண்ணின் பெயர் மற்றும் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் எகிப்திய நாட்டவர் என்றும், 20 வயதுக்கு உட்பட்டவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க படையினரால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட தன் பின்னர் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு அய்மன் அல் ஜவாஹரி என்பவர் தலைவராக இருந்து வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஹம்சா பின்லேடன் பொறுப்பு வகிப்பதாக கூறப்படுகிறது. இரட்டை கோபுர தாக்குதலின்போது அட்டா விமானம் ஒன்றை கடத்திச் சென்று சர்வதேச வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தில் தாக்குதல் நடத்தியவர் என்பதால், ஹம்சவுக்கு அட்டா மீது கூடுதல் பிரியம் இருந்ததாக குறப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு அல் கொய்தா ஆதரவாளர்கள் அனைவரும் வாஷிங்டன், லண்டன், பாரிஸ் மற்றும் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து தாக்குதலுக்கு தயாராகுங்கள் என ஹம்சா வெளிப்படையாக கோரிக்கை முன்வைத்தார். இதனையடுத்து அமெரிக்கா ஹம்சா பின்லேடனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story