சட்டப்பூர்வமான கருக்கலைப்பு மசோதா அர்ஜென்டினா நாடாளுமன்றத்தில் தோல்வி
சட்டப்பூர்வமான கருக்கலைப்பு மசோதா அர்ஜென்டினா நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.
ரோமன் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக உள்ள அர்ஜென்டினாவில், கருக்கலைப்புக்கு ஆதரவானவர்கள் இது குறித்த சட்ட மசோதா நிறைவேற வேண்டும் என பல ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
கருக்கலைப்பை எதிர்க்கும் அதிபர் மவுரீசியோ மாக்ரி நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்ததும் இந்த விவகாரம் சூடு பிடித்தது. நாடாளுமன்றத்தின் கீழவையான காங்கிரசில் இந்த மசோதா மிகச் சில வாக்குகள் வித்தியாசத்தில் சமீபத்தில் வெற்றி பெற்றது.
தற்போது அர்ஜென்டினா நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை, கருவுற்ற 14 வாரங்களுக்குள் செய்யப்படும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கான மசோதாவை நிராகரித்துள்ளது.
தொடர்ச்சியாக நடத்த விவாதத்துக்கு பிறகு நடந்த வாக்கெடுப்பில் 38 செனட் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். 31 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மசோதா தோல்வி அடைந்ததால் நாடாளுமன்றத்திற்கு வெளியே பதற்றம் நிலவியது. கருக்கலைப்புக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் இந்த மசோதா நிராகரிக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கள் ஆதரவைத் தெரிவிக்க பச்சை நிறத்தில் ஆடை அணிந்து வந்திருந்த கருக்கலைப்புக்கு ஆதரவானவர்கள் மசோதா நிராகரிக்கப்பட்டதால் கண்ணீர் சிந்தனர்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருகுவே மற்றும் கியூபா ஆகிய இரு நாடுகள் மட்டுமே கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கியுள்ளன.
Related Tags :
Next Story