மருத்துவமனையில் பயங்கர தீ; 9 பேர் உடல் கருகி சாவு


மருத்துவமனையில் பயங்கர தீ; 9 பேர் உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 13 Aug 2018 11:00 PM GMT (Updated: 13 Aug 2018 7:37 PM GMT)

தைவானில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 9 பேர் உடல் கருகி பலியாயினர்.

தைபே,

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் பல அடுக்குமாடிகளை கொண்ட மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

நேற்று காலை மருத்துவமனையின் 7-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியது.

இதனால் பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. நோயாளிகளும், ஊழியர்களும் அலறிஅடித்தபடி மருத்துவமனையை விட்டு வெளியேறினர். ஆனால் அதற்குள் தீ சில அறைகளை முழுமையாக சூழ்ந்துகொண்டதால் அங்கிருந்தவர்கள் வெளியேறமுடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இதன் காரணமாக தீயின் கோரப்பிடியில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

Next Story