போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட பாம்பு!


போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட பாம்பு!
x
தினத்தந்தி 1 Sep 2018 9:07 AM GMT (Updated: 1 Sep 2018 9:07 AM GMT)

இங்கிலாந்தில் போலீஸ் நிலையம் ஒன்றுக்கு பெட்டியில் கொண்டுவரப்பட்ட பாம்பைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

சமீபத்தில் இங்கிலாந்தின் நியூகாசில் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு பெண் ஒருவர் தன்னுடைய நண்பருடன் பெரிய அட்டைப் பெட்டியைக் கொண்டுவந்தார்.

அதில் ஆங்காங்கே ஏராளமான சிறு துளைகளும் இடப்பட்டிருந்தன. போலீஸ்காரர் ஒருவர் அந்தப் பெட்டியை வாங்கித் திறந்து பார்த்தபோது உள்ளே 6 அடி நீளத்தில் வெள்ளை நிறப் பாம்பு ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ஆரம்பத்தில், விஷமுள்ள பாம்பாக இருக்குமோ என நினைத்து போலீசார் அனைவரும் அங்கும் இங்கும் ஓட, அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பானது. பின்னர் அது விஷமில்லாத பாம்பு வகையைச் சேர்ந்தது என்பதை அறிந்த போலீசார் பெட்டியைக் கொண்டு வந்த பெண்ணிடம் பாம்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

‘தெருவில் மதிய உணவுக்காக நடந்து செல்லும்போது இந்தப் பாம்பைப் பார்த்தேன். எங்கு செல்வதென தெரியாமல் அது தவித்துக் கொண்டிருந்தது. உடனே அதனை எடுத்துக்கொண்டு போலீசாரிடம் ஒப்படைக்கலாம் என்று வந்தேன்’ என்றார் அந்தப் பெண்.

ஒரு பெட்டியில் பாம்பை எடுத்துப் போட்டு, காற்று செல்வதற்காக பெட்டியில் ஓட்டை மட்டும் இட்டிருந்தேன் என்றும் அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘இந்த அல்பினோ பாம்புகள் விஷமில்லாத வகையைச் சார்ந்ததால் அவற்றை பெரும்பாலானோர் வீட்டில் செல்லப் பிராணிகளைப் போல வளர்த்து வருகின்றனர். இதனை கட்டாயம் அப்பகுதியில் உள்ள யாரோ ஒருவர்தான் செல்லப் பிராணியாக வளர்த்திருக்க வேண்டும். இதன் உரிமையாளரை கண்டுபிடித்து நிச்சயம் ஒப்படைப்போம்’ என்றனர். 

Next Story