கொம்புக்காக கொல்லப்பட்ட தாயை விட்டு குட்டி காண்டாமிருகம் பிரிய மறுத்த சோகம்


கொம்புக்காக கொல்லப்பட்ட தாயை விட்டு குட்டி காண்டாமிருகம் பிரிய மறுத்த சோகம்
x
தினத்தந்தி 2 Sep 2018 7:26 AM GMT (Updated: 2 Sep 2018 7:26 AM GMT)

தென்னாப்பிரிக்காவில் வேட்டையாடும் கும்பலால் கொல்லப்பட்ட தாயை விட்டு குட்டி காண்டாமிருகம் பிரிய மறுத்தது சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் குரூஜர் தேசிய பூங்கா அமைந்துள்ளது.  இங்கு வெள்ளை நிற அரிய வகையை சேர்ந்த தாய் காண்டாமிருகம் ஒன்று புதிய குட்டியை ஈன்றது.  அது தனது குட்டியுடன் பூங்காவில் சுற்றி திரிந்து வந்தது.

இந்த நிலையில், விலங்குகளை அதன் ரோமம், கொம்பு போன்ற பொருட்களுக்காக வேட்டையாடும் கும்பல் ஒன்று தாய் காண்டாமிருகத்தினை கொன்றுள்ளது.

இந்த கும்பல் குட்டி காண்டாமிருகத்தினையும் கோடாரிகளால் தாக்கியுள்ளது.  இதுபோன்ற கும்பல்கள் காண்டாமிருகங்களை தாக்கி அவற்றின் கொம்புகளை நல்ல விலைக்கு விற்று விடுகின்றன.  இந்த குட்டி காண்டாமிருகம் கும்பலிடம் இருந்து தப்பியுள்ளது.  ஏனெனில் அதற்கு இரண்டு கொம்புகளும் இன்னும் வளரவில்லை.  அதனால் கும்பல் அதனை உயிருடன் விட்டு விட்டு சென்றுள்ளது.

ஆனால் இறந்து கிடந்த தாய் காண்டாமிருகத்தின் அருகேயே பல மணிநேரம் அதனை விட்டு பிரிய மறுத்து குட்டி காண்டாமிருகம் காயத்துடன் இருந்துள்ளது.  பூங்கா ஊழியர்கள் அங்கு வந்து அதனை மீட்டு அருகில் உள்ள காண்டாமிருகங்களுக்கான வன காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அதற்கு ஆர்தர் என பெயரிட்டு 3 மாதங்களாக வளர்த்து வருகின்றனர்.  இதுபற்றி கம்பிரியா விலங்குகள் பூங்காவின் தலைமை செயல் அதிகாரி கேரன் புரூவர் கூறும்பொழுது, மிக குறைந்த வயதில் அதனிடம் இருந்து தாயை பறித்துள்ளனர்.  தொடர்ந்து தாயை அது தேடி வருகிறது.  அது அச்சத்தில் இருந்து மீள நீண்ட நாட்கள் ஆகும் என கூறியுள்ளார்.


Next Story