அமெரிக்காவில் தனது குடியிருப்பு என தவறாக நினைத்து உள்ளே சென்று ஒருவரை சுட்டு கொன்ற பெண் காவலர்
அமெரிக்காவில் தனது குடியிருப்பு என தவறாக நினைத்து வேறு ஒருவரின் குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்தவரை பெண் காவலர் சுட்டு கொன்றுள்ளார்.
சிகாகோ,
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் காவல் துறையில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவர் பணி முடிந்து தனது வீட்டிற்கு கிளம்பி உள்ளார்.
அவர் டல்லாஸ் நகர் அருகே குடியிருப்பு வளாகம் அமைந்த பகுதிக்கு சென்றார். அங்கு அவர் தவறுதலாக போத்தம் ஷேம் ஜீன் என்பவரது குடியிருப்புக்குள் சென்றுள்ளார். அவரிடம் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் போத்தம் ஷேமை அவர் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஷேம் உயிரிழந்து விட்டார்.
இதன்பின் தகவல் அறிந்து வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபொழுது, எனது குடியிருப்பு என நினைத்து உள்ளே நுழைந்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டதில் மரணமடைந்த ஷேம் கரீபியன் தீவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர். தனியார் கிறிஸ்தவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு டல்லாஸ் நகரில் உள்ள கணக்கியல் துறை சார்ந்த நிறுவனம் ஒன்றில் ஷேம் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த சம்பவத்தினை அடுத்து, பெண் காவலரின் ரத்தம் சேகரிக்கப்பட்டு மதுபானம் எதுவும் குடித்துள்ளாரா? என அறிவதற்காக சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
இதுபற்றி ஷேமின் சகோதரி முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியில், உனது பிறந்த நாளுக்கு பரிசு அளிக்க என்ன பொருள் வாங்கலாம் என யோசித்து கொண்டிருந்தேன். ஆனால் உனக்கு சவ பெட்டி வாங்க நேர்ந்துள்ளது என தனது வருத்தத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.