அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் வெங்கையா நாயுடு பேச்சு
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் வெங்கையா நாயுடு கூறினார்.
சிகாகோ,
கூட்டத்தில், வெங்கையா நாயுடு பேசியதாவது:–
பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. அடுத்த 10, 15 ஆண்டுகளில் உலகின் முன்னணி பொருளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஆவதற்கான பாதையில் இந்தியா நடைபோட்டு வருகிறது. அதனால், இந்தியாவை உலகமே உற்று நோக்கி வருகிறது.
இந்தியாவின் வேகமான வளர்ச்சி பாதையில் இணைத்துக்கொள்ளுமாறு உங்களை அழைக்கிறேன். புதிய, எழுச்சி இந்தியாவை உருவாக்குவதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.வெளிநாடுகளில் 3 கோடியே 20 லட்சம் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் வசித்து வருகிறார்கள். வெளிநாட்டுவாழ் தெலுங்கர்கள், இந்தியாவின் கவுரவத்தை உயர்த்த எப்போதும் பாடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்தில் ஒரு கிராமத்தை தத்து எடுத்து அதை மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும்.
இந்தியாவின் முக்கிய பண்பாடுகளை கட்டிக்காக்க வேண்டும். உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருத வேண்டும்.உலகத்தின் ஆன்மிக தலைநகராக இந்தியா திகழ்கிறது. உலகின் பழமையான நாகரிகங்களில் இந்தியா முதன்மையானது. பூஜ்யம் முதல் யோகாவரை கண்டுபிடித்து, இந்தியர்கள் உலகத்துக்கு அளப்பரிய பங்காற்றி உள்ளனர்.
உங்களின் தாய் மொழியை, சொந்த கிராமத்தை, தாய்நாட்டை, பெற்றோரை, உங்கள் வெற்றிக்கு காரணமான குருவை மறக்கவோ, புறக்கணிக்கவோ செய்யாதீர்கள். வாழ்க்கையில் முன்னேற விரும்பும் எவரும் தங்கள் கடந்த காலத்தை மறக்கக்கூடாது.
உலகின் பல பகுதிகளில் நிலவும் நடைமுறைகளை ஏற்றுக்கொண்டாலும், தங்களது கலாசார, ஆன்மிக வேர்களை மறக்கக்கூடாது. நமது பண்டிகைகளை கொண்டாட வேண்டும். பழக்க வழக்கங்களை கட்டிக்காக்க வேண்டும்.அமெரிக்காவின் முன்னேற்றத்துக்கு தெலுங்கர்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர். அவர்கள் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளில் இருப்பது பெருமைக்கு உரியதாக இருக்கிறது. அவர்களும், மற்ற இந்தியர்களும் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுக்கு பாலமாக உள்ளனர்.
இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.
நிகழ்ச்சியில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னாவும் கலந்து கொண்டார்.