ஆப்கானிஸ்தானில் போராட்டக்காரர்கள் மீது நடந்த தற்கொலை தாக்குதலில் பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் போராட்டக்காரர்கள் மீது நடந்த தற்கொலை தாக்குதலில் பலி எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.
ஜலாலாபாத்,
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் ஜலாலாபாத் நகருக்கும் மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில், உள்ளூர் காவல் துறை தலைவர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவருக்கு எதிராக போராட்டக்காரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் அந்த கூட்டத்தினிடையே வந்த நபரொருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளான். இந்த சம்பவத்தில் 22 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், இந்த தற்கொலை தாக்குதலில் பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வடைந்து உள்ளது. 165 பேர் காயமடைந்து உள்ளனர் என அரசு தரப்பில் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த படுகொலைகளுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். அமைப்பு பெருமளவிலான சமீபத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த மற்றும் மரணமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
கடந்த ஜனவரியில் காபூல் நகரில் நெருக்கடி மிகுந்த சாலையில் ஆம்புலன்ஸ் வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்ததில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெருமளவிலானோர் பொதுமக்கள். இந்த தாக்குதலுக்கு தலீபான் அமைப்பு பொறுப்பேற்றது.