”செல்போனுடன் விளையாடாமல் என்னுடன் விளையாடுங்கள்” - பெற்றோருக்கு எதிராக போராடிய சிறுவன்


”செல்போனுடன் விளையாடாமல் என்னுடன் விளையாடுங்கள்” - பெற்றோருக்கு எதிராக போராடிய சிறுவன்
x
தினத்தந்தி 15 Sep 2018 9:15 AM GMT (Updated: 15 Sep 2018 9:16 AM GMT)

செல்போனுடன் விளையாடாமல் என்னுடன் விளையாடுங்கள் என்று பெற்றோருக்காக வீதிக்கு வந்து போராடிய சிறுவன்.

நவீன செல்போன் ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும்  அதனால் பல நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. செல்போன் வந்த பின் மக்களை இணைக்கும் ஆயுதமாக அது விளங்கினாலும்  கூட்டத்திலும் ஒருவரை தனிமைப்படுத்தும் ஆயுதமாகவும்  செல்போன் உள்ளது.  பயணம் செய்யும் பஸ்,ரெயில், சினிமா திரையரங்கம் என  எந்த ஒரு மக்கள் கூடும் இடத்திலும் இப்போது மனிதன் தன் செல்போனுடனேயே உறவாடுகிறான். அது போல்  குடும்பம்  என வந்தாலும் பெரும்பாலும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் விளையாடுவதை விட்டு விட்டு செல்போனுடன் விளையாடுகிறார்கள் .

இதனை உணர்ந்த சிறுவன் ஒருவன்  பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  ஒரு பேரணியை நடத்தி உள்ளான்.

'செல்போனில் விளையாடாதீர்கள். அதற்குப் பதிலாக என்னுடன் விளையாடுங்கள்!' என்பதுதான் பேரணியின் முழக்கம். செப்டம்பர் 8-ம் தேதி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்த இந்தப் பேரணியில் சுமார் 150 சிறுவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு வித்திட்டவன் ஜெர்மனியைச் சேர்ந்த 7 வயது எமில் ரஸ்டிக் .

இதைத் தொடர்ந்து எமிலுக்கு ஆதரவுக் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. ஜெர்மனி நாளேடுகளும், பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் எமிலை ஹீரோ ஆக்கிவிட்டன. ஆனால் அவனுக்கு அது தேவையில்லை. எமிலுக்கும் எமில் மாதிரியான சிறுவர்களுக்கும் பெற்றோரின் அரவணைப்புதான் வேண்டும்.



Next Story