மலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழப்பு


மலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 19 Sep 2018 2:35 PM GMT (Updated: 19 Sep 2018 2:35 PM GMT)

மலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழந்துள்ளனர், இதுதொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.


கோலாலம்பூர், 


மலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது. இதனை ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் குடிக்கின்றனர். இப்படி அங்கு தலைநகர் கோலாலம்பூரிலும், செலங்கோர் மாகாணத்திலும் உள்நாட்டு சாராயம் குடித்தவர்களில் 57 பேர் மயங்கி சரிந்தனர். மெத்தனால் கொண்டு தயாரிக்கப்படுகிற இந்த சாராயத்தில் வி‌ஷத்தன்மை கலந்து இருந்ததை அறியாமல் அவர்கள் குடித்து உள்ளனர்.

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. உள்நாட்டு சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மலேசியர்கள் மற்றவர்கள் வங்காளதேசம், இந்தோனேசியா, மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சோதனைகளை நடத்தியுள்ள அந்நாட்டு போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.


Next Story