அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பு “தவறை உடனடியாக சரிசெய்து கொள்ளுங்கள்” சீனா எச்சரிக்கை


அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பு “தவறை உடனடியாக சரிசெய்து கொள்ளுங்கள்” சீனா எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Sep 2018 10:06 AM GMT (Updated: 21 Sep 2018 10:06 AM GMT)

அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததை அடுத்து “தவறை உடனடியாக சரிசெய்து கொள்ளுங்கள்,” என சீனா எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பெய்ஜிங்,

ரஷியாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியதன் காரணமாக சீனாவின் ராணுவ அமைப்பிற்கு நிதி பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தகப்போர் பெரும் மோதலை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் அதிரடி வரிஉயர்வு காரணமாக சீனாவும், இந்தியாவும் பாதிக்கப்பட்டு வருகிறது. சீனா பதிலடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போது பாதுகாப்பு அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பொருளாதார தடையை விதித்து இருப்பது சீனாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தவறை உடனடியாக சரிசெய்து கொள்ளுங்கள்,” என சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எங்கள் மீதான தடையை விலக்கிக்கொள்ளுங்கள், இல்லையெனில் கடுமையான விளைகளை எதிர்க்கொள்ள நேரிடும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு அதிகாரப்பூர்வமாகவே சீனா எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையானது, சர்வதேச உறவுகளின் அடிப்படை கொள்கையை மீறுவதாகும். இருநாடுகள் மற்றும் ராணுவங்கள் இடையே உள்ள உறவுகளை கடுமையாக பாதிக்கசெய்யும் நடவடிக்கையாகும். எங்கள் மீதான தடையை விலக்கிக்கொள்ளுங்கள், இல்லையெனில் கடுமையான விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்று அமெரிக்காவிடம் கூறிவிட்டோம் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ரஷியாவின் எஸ்-400 ரக ஏவுகணையை இந்தியா வாங்க முடிவு செய்துள்ளது, இதுதொடர்பான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவிற்கும் பொருளாதார தடை எச்சரிக்கை எழுந்துள்ளது.

Next Story