ஐ.நா. சபையின் 73-வது பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றடைந்தார் சுஷ்மா சுவராஜ்


ஐ.நா. சபையின் 73-வது பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றடைந்தார் சுஷ்மா சுவராஜ்
x
தினத்தந்தி 23 Sep 2018 3:04 PM GMT (Updated: 23 Sep 2018 3:04 PM GMT)

ஐநா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அமெரிக்கா சென்றடைந்தார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். இரண்டு வாரம் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று நடப்பு ஆண்டில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து பொதுவிவாதம் நடத்துவார்கள்.

இந்த ஆண்டிற்கான ஐ.நா பொதுச்சபையின் 73-வது கூட்டம், செப்டம்பர் 25 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் செப்டம்பர் 25 ஆம் தேதி காலை, ஐக்கிய நாடுகள் சபையில்  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலகத் தலைவர்களிடையே  2-வது முறையாக உரையாற்ற உள்ளார். 

இந்நிலையில், இந்தியா சார்பாக இந்த கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்ட மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியூயார்க் நகரம் சென்றடைந்தார்.

வரும் 29-ம் தேதி நடைபெறும் விவாதத்தில் இந்தியா தரப்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தின் போது, பல்வேறு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை சந்திக்கிறார்.  அந்நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story