மாலத்தீவு அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு


மாலத்தீவு அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 24 Sep 2018 12:00 AM GMT (Updated: 23 Sep 2018 8:05 PM GMT)

மாலத்தீவு அதிபர் தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அதிபர் அப்துல்லா யாமீன் பதவியை தக்க வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மாலி,

1192 குட்டித்தீவுகளை கொண்ட மாலத்தீவில் சமீப காலமாக அரசியல் ஸ்திரமற்ற சூழல் உள்ளது. அங்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் இந்த தீர்ப்பை அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்கவில்லை. இது அங்கு அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்தது. அதிபர் நிலைப்பாட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் எஞ்சிய நீதிபதிகள் முந்தைய தீர்ப்பை திரும்பப்பெற்றனர்.

இந்த நிலையில் அங்கு செப்டம்பர் 23–ந் தேதி (நேற்று) அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இலங்கையில் வசித்து வருகிற முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து அவரது கட்சி சார்பில் இப்ராகிம் முகமது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அரசியல் ரீதியில் சர்ச்சைக்கிடமான நிலையில் நேற்று அங்கு ஓட்டுப்பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது முதலே விறுவிறுப்பாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தலைநகர் மாலியில் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பேகூட வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று வரிசையில் நின்றதாக தகவல்கள் கூறுகின்றன.

எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி தொண்டர் சானா அமிநாத் கூறும்போது, ‘‘வாக்காளர்கள் மிகுந்த ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளில் திரண்டுள்ளனர்’’ என குறிப்பிட்டார்.

இந்த தேர்தலில் மோசடிகள் நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பும் கவலை தெரிவித்து உள்ளன. மாலத்தீவு ஜனநாயக நிலைமையில் முன்னேற்றம் காணாவிட்டால், அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அவை எச்சரித்துள்ளன.

முன்னாள் அதிபர் முகமது நஷீத்,  ‘‘புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் யாமீன் வெற்றி பெற முடியாது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவருக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன.  ஆனால் ஓட்டுப்பெட்டியில் விழுந்துள்ள ஓட்டுகளை எண்ணி அதன் அடிப்படையில் முடிவை வெளியிடாமல் வேறு விதமாக வெளியிடக்கூடும்’’ என்று கூறி இருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் அதிபர் அப்துல்லா யாமீன் பதவியை தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் கணிசமாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


Next Story