ஹாலண்டே சர்ச்சை கருத்தால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என பிரான்சு அச்சம்


ஹாலண்டே சர்ச்சை கருத்தால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என பிரான்சு அச்சம்
x
தினத்தந்தி 24 Sep 2018 2:50 AM GMT (Updated: 24 Sep 2018 2:50 AM GMT)

ஹாலண்டே சர்ச்சை கருத்தால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என பிரான்சு அச்சம் தெரிவித்துள்ளது.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016-ல் மோடி அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே உதிரி பாகங்கள் தயாரிப்பிற்கு அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்தை இந்திய அரசுதான் சிபாரிசு செய்தது என்று கூறினார். இதனால் இப்பிரச்சினையில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

ஹாலண்டேயின் கருத்தை மத்திய அரசும், பிரான்ஸ் அரசாங்கமும் மறுத்தன. டசால்ட் நிறுவனமும், ரிலையன்ஸ்சும் செய்துகொண்ட ஒப்பந்தம் இது. இதில் எங்களுடைய தலையீடு எதுவும் இல்லை என்று இரு நாடுகளின் அரசும் கூறின. ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் ரூ.1.30 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், மோடியும், அனில் அம்பானியும் இணைந்து இந்திய ராணுவத்தின் மீது இவ்வளவு தொகையின் மீது துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று குற்றம்சாட்டி இருக்கிறார். 

ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்திய அரசியலில் அனலை கிளப்பி வரும் நிலையில், பிரான்ஸ் வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஜீன் பாப்டிஸ்ட் லெமொய்ன் பாரீஸில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: “வெளிநாடுகளைப் பற்றி அவசியமற்ற கருத்தைத் தெரிவிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. பதவியில் இல்லாத நபரின் சர்ச்சைக்குரிய பேச்சால் இந்தியா- பிரான்ஸ் உறவில் சிக்கல் எழுமோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டது” என்றார். 

Next Story