காசா எல்லையில் போராட்டம்: இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர் உயிரிழப்பு


காசா எல்லையில் போராட்டம்: இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 25 Sep 2018 11:00 PM GMT (Updated: 25 Sep 2018 8:15 PM GMT)

காசா எல்லையில் நடந்த போராட்டத்தின்போது, இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர் உயிரிழந்தனர்.

காசா,

இஸ்ரேல் 1948-ம் ஆண்டு உருவானது. அப்போது நடந்த மோதல்களில் பல்லாயிரக் கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக சென்றனர். அப்போது இடம் பெயர்ந்த சுமார் 7 லட்சம் பேர், திரும்பி வர அனுமதிக்கப்பட வேண்டும் என்பது பாலஸ்தீனியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், இஸ்ரேல் படையினரின் அத்துமீறல்களை எதிர்த்தும் அவ்வப்போது பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல், காசா எல்லையில் நேற்று முன்தினம் பெரிய அளவில் ஒரு போராட்டம் நடந்தது. இஸ்ரேலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது வன்முறை மூண்டது. டயர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. கற்களும், வெடிப்பொருட்களும் வீசப்பட்டன.

இஸ்ரேல் படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதில் குண்டுபாய்ந்து பாலஸ்தீனியர் ஒருவர் உயிரிழந்தார். டஜன் கணக்கிலான பாலஸ்தீனியர் கள் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி காசா அதிகாரிகள் கூறும்போது, “வன்முறை மூண்டதில் 90 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 10 பேர் துப்பாக்கிச்சூட்டில் சிக்கியவர்கள்” என்று குறிப்பிட்டனர். பாலஸ்தீனத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஹமாஸ் இயக்கத்தினர்தான் வன்முறையை தூண்டி விட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

Next Story