பிரான்ஸ் நாட்டில் ‘ரபேல்’ விமானம் தயாரிக்கும் ஆலைக்கு சென்றார், நிர்மலா சீதாராமன்


பிரான்ஸ் நாட்டில் ‘ரபேல்’ விமானம் தயாரிக்கும் ஆலைக்கு சென்றார், நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 12 Oct 2018 11:45 PM GMT (Updated: 12 Oct 2018 9:13 PM GMT)

பிரான்ஸ் நாட்டில் ‘ரபேல்’ போர் விமானம் தயாரிக்கும் ஆலைக்கு நிர்மலா சீதாராமன் சென்றார்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில், இந்தியாவில் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் கூட்டாளியாக அனில் அம்பானியின் நிறுவனம் சேர்க்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி வருகிறது.

ஆனால், இதற்கும், தங்களுக் கும் சம்பந்தம் இல்லை என்று மத்திய அரசு தரப்பு மறுத்து வருகிறது. அம்பானி நிறுவனத்தை தாங்கள் சுதந்திரமாகவே தேர்வு செய்ததாக டசால்ட் ஏவியேசன் தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சைக்கு இடையே, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு நேற்று முன்தினம் போய்ச் சேர்ந்தார். அன்று மாலையில், பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

தனி சந்திப்புக்கு பிறகு, இருவரும் இருநாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இருதரப்பு, பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் இடம்பெற்றன.

இரு நாடுகளும் ஆயுதங்களை கூட்டாக தயாரிப்பது பற்றியும், கடற்படைகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, ‘ரபேல்’ போர் விமானம் தயாரிக்கும் ஆலைக்கு நிர்மலா சீதாராமன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். பாரீஸ் அருகே அர்ஜென்டில் என்ற இடத்தில், டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் இந்த ஆலை அமைந்துள்ளது.அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்கள் வினியோகம் தொடங்க இருப்பதால், விமான தயாரிப்பின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


Next Story