பாகிஸ்தானில் இறந்தவரின் வங்கி கணக்கில் ரூ.460 கோடி பணபரிமாற்றம்; எப்.ஐ.ஏ. விசாரணையில் தகவல்


பாகிஸ்தானில் இறந்தவரின் வங்கி கணக்கில் ரூ.460 கோடி பணபரிமாற்றம்; எப்.ஐ.ஏ. விசாரணையில் தகவல்
x
தினத்தந்தி 15 Oct 2018 3:51 PM GMT (Updated: 15 Oct 2018 3:51 PM GMT)

பாகிஸ்தானில் இறந்து போனவரின் பெயரில் போலியான வங்கி கணக்குகளை தொடங்கி ரூ.460 கோடி பணபரிமாற்றம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கராச்சி,

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வந்தவர் இக்பால் ஆரயீன்.  கடந்த 2014ம் ஆண்டு மே 9ந்தேதி இவர் மரணமடைந்து விட்டார்.  அதன்பின்னர் அவரது பெயரில் 3 வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன.  இந்த கணக்குகளில் மொத்தம் ரூ.460 கோடி அளவிற்கு பணபரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  இதனை அந்நாட்டின் மத்திய புலனாய்வு துறை மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர் தெரிய வந்துள்ளது.

சமீப காலங்களாக பணமோசடி பற்றி மத்திய புலனாய்வு துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.  இந்த விசாரணையில் சில தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தனிப்பட்ட பல்வேறு நபர்களில் வங்கி கணக்குகளில் பணமோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, பணமோசடி வழக்குகள் பற்றி விசாரிக்க கூட்டு புலனாய்வு அமைப்பு ஒன்றை நியமித்து உள்ளது.  அதன்பின்பு தேசிய புலனாய்வு துறை கடந்த செப்டம்பரில் இருந்து மேற்கொண்டு வரும் விசாரணையில் பல்வேறு சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

சமீபத்தில், கராச்சியில் ரஷீத் என்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.300 கோடி செலுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.  அவரிடம் விளக்கம் கேட்டு எப்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியது.  அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தனது அறியாமையை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று உணவு விற்பனை செய்பவர் மற்றும் மாணவர் ஒருவர் வங்கி கணக்கிலும் கோடி கணக்கில் பணபரிமாற்றம் செய்திருந்தது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

Next Story