எனது கணவர் உயிருடன் இருக்கிறாரா? என்னால் உறுதியாகக் கூற இயலவில்லை- இண்டர்போலின் தலைவர் மனைவி


எனது கணவர் உயிருடன் இருக்கிறாரா? என்னால் உறுதியாகக் கூற இயலவில்லை- இண்டர்போலின் தலைவர்  மனைவி
x
தினத்தந்தி 23 Oct 2018 12:09 PM GMT (Updated: 23 Oct 2018 12:09 PM GMT)

சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இண்டர்போலின் தலைவர் உயிருடன் இருக்கிறார் என என்னால் உறுதியாகக் கூற இயலவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

தனது கணவர் சீனாவின் அரசியல் சித்திரவதைக்குள்ளாகியிருப்பதாக கூறியுள்ள மெங் ஹாங்வெய்யின் மனைவி   தன் கணவர் உயிருடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். 


செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி பிரான்சிலிருந்து சீனா புறப்பட்ட மெங், லஞ்சம் பெற்றதாகக் கூறி சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வந்தபின், அவரிடமிருந்து ஒரு ராஜினாமா கடிதம் வந்ததோடு சரி, அதற்குப்பிறகு எந்த தகவலும் இல்லை.

பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த தொலைபேசி பேட்டி ஒன்றில் மெங்கின் மனைவி, என் கணவர் உயிருடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை, அவர்கள் கொடூரமானவர்கள், அவர்கள் மோசமானவர்கள், இந்த சம்பவம் அவர்கள் எதுவும் செய்யக்கூடியவர்கள் என்பதைக் காட்டுகிறது, என்னால் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது, அவர்களது கொடூரத்திற்கு அளவே இல்லை என்று சீன அரசியல் தலைவர்களைக் குறித்து கூறியுள்ளார்.அத்துடன் தனது பிள்ளைகள் அப்பாவைத் தேடுவதாகத் தெரிவித்துள்ள மெங்கின் மனைவி, தானும் மிரட்டப்பட்டதாக தெரிவிக்கிறார்.தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகத் தெரிவிக்கும் மெங்கின் மனைவி, அதில், எதுவும் பேசாதே, கவனி, உன்னைக் கொல்ல இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறியதாகத் தெரிவிக்கிறார். ஏற்கனவே கடைசியாக மெங் தன் மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், ஆபத்து என்பதைக் காட்டும் வண்ணமாக ஒரு கத்தி இமோஜியை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story