அயர்லாந்து நாட்டில் மிக்கேல் ஹிக்கின்ஸ் மீண்டும் அதிபராக தேர்வு


அயர்லாந்து நாட்டில் மிக்கேல் ஹிக்கின்ஸ் மீண்டும் அதிபராக தேர்வு
x
தினத்தந்தி 28 Oct 2018 10:30 PM GMT (Updated: 28 Oct 2018 8:02 PM GMT)

அயர்லாந்து நாட்டில் மிக்கேல் ஹிக்கின்ஸ் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

டப்ளின்,

அயர்லாந்து நாட்டில் கடந்த 26-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் மிக்கேல் ஹிக்கின்ஸ் மீண்டும் போட்டியிட்டார். சுயேச்சையாக போட்டியிட்ட அவரை எதிர்த்து பீட்டர் கேசி, சியான் கலாகெர் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் அதிபர் மிக்கேல் ஹிக்கின்ஸ் 55.8 சதவீத ஓட்டுகள் வாங்கி அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக அதிபராக தேர்வு பெற்று இருக்கிறார். 1966-ம் ஆண்டுக்கு பின்னர் அங்கு அதிபர் ஒருவர் தொடர்ந்து 2-வது முறை போட்டியிட்டது இதுவே முதல் முறை.

அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில் தொழில் அதிபரான பீட்டர் கேசி 23.25 சதவீத ஓட்டுகளையும், சியான் கலாகெர் 6.41 சதவீத ஓட்டுகளையும் பெற்றனர்.

அயர்லாந்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும் சரி, பிந்தைய கருத்துக்கணிப்பிலும் சரி, அதிபர் மிக்கேல் ஹிக்கின்ஸ்தான் முன்னிலை பெற்றிருந்தார். அதன்படியே தேர்தலிலும் கூடுதல் ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றிருக்கிறார். அவரை அயர்லாந்தில் உள்ள முக்கியமான 3 கட்சிகளும் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்தில் அதிபர் பதவிக்காலம் 7 ஆண்டுகள் ஆகும். அந்த நாட்டின் சட்டப்படி ஒருவர் 2 முறைக்கு மேல் அதிபர் ஆக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story