உலக அடையாளமாக மேக் இன் இந்தியா மாறியுள்ளது: ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு


உலக அடையாளமாக மேக் இன் இந்தியா மாறியுள்ளது: ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 29 Oct 2018 1:42 AM GMT (Updated: 29 Oct 2018 1:42 AM GMT)

டிஜிட்டல் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருகிறது என்று ஜப்பானில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.

டோக்கியோ,

இந்தியா-ஜப்பான் இடையேயான 13-வது வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் டோக்கியோ சென்றடைந்தார். 

அவருக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மோடி மேற்கு டோக்கியோவில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலைகளால் சூழப்பட்ட யமனாஷி நகருக்கு சென்றார்.அங்குள்ள மவுண்ட் புஜி ஓட்டலில் மோடியும், ஷின்ஜோ அபேயும் நேற்று காலை சந்தித்தனர். தொடர்ந்து அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 

இன்று, பிரதமர்  மோடி ஜப்பானில் வாழும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது மோடி கூறியதாவது:- “ தீபாவளி வெளிச்சம் போல் இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நமது நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். மிகப்பெரும் மாற்றத்தை கடந்து இந்தியா சென்று கொண்டிருக்கிறது. மனித நேயத்தை நோக்கி இந்தியா செய்யும் முயற்சிகளை உலக நாடுகள் பாராட்டிவருகின்றன. 

டிஜிட்டல் உட்கட்டமைப்பு துறையில் இந்தியா மிகப்பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. கிராமங்கள் வரை பிராட்பேண்ட் இணைப்பு உள்ளது. 100 கோடிக்கும் மேலான செல்போன் இணைப்புகள் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ளன. சிறிய பாட்டில் குளிர்பானத்தை விட ஒரு ஜிபி டேடா  குறைவாக உள்ளது. சேவை விநியோகத்திற்கு முக்கிய கருவியாக டேடா உள்ளது. 

மேக் இன் இந்தியா  சர்வதேச பிராண்ட் ஆக தற்போது மாறியுள்ளது. தரமான பொருட்களை தற்போது நாங்கள், எங்களுக்காக மட்டுமில்லை, உலகத்திற்காகவும் உற்பத்தி செய்கிறோம். சர்வதேச முனையமாக இந்தியா மாறியுள்ளது. குறிப்பாக மின்னணு, ஆட்டோ மொபைல் உற்பத்தியில் இந்தியா சர்வதேச உற்பத்தி முனையாக மாறியிருக்கிறது. மொபைல்போன் உற்பத்தியில் நெ.1 என்ற இடத்தை நோக்கி இந்தியா வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு 100-க்கு மேற்பட்ட செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் விண்ணுக்கு அனுப்பி நமது விஞ்ஞானிகள் புதிய சாதனையை நிகழ்த்தினர். சந்திராயன் மற்றும் மங்கல்யான் ஆகிய விண்கலங்களை மிக குறைந்த விலையில் இந்தியா அனுப்பியது.  ககன்யான்  விண்கலத்தை 2022-ல் விண்ணுக்கு அனுப்ப இந்தியா தயாராகி வருகிறது” இவ்வாறு அவர் பேசினார்.

Next Story