வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டு சிறை
வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
டாக்கா,
வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டாக்காவில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கலிதா ஜியா சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், மறு விசாரணைக்கு உத்தரவிட முகாந்திரம் இல்லை என்று கூறிய ஐகோர்ட், கலிதா ஜியாவின் மனுவை தள்ளுபடி செய்தது. சுப்ரீம் கோர்ட்டும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஜியா அனாதை இல்ல அறக்கட்டளைக்கு முறைகேடாக 2.5 லட்சம் டாலர்கள் நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து கடந்த 8 (பிப்ரவரி) ஆம் தேதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வங்காள தேச தலைநகர் டாக்காவின் சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் பிரதம மந்திரி கலிதா ஜியாவுக்கு எதிராக நடைபெற்ற வழக்கில் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
நீதிபதி எம்.டி அக்தருசமான் திங்கள்கிழமை, டாக்கா நீதிமன்றத்தில் கலித ஜியா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார். இதே போல் மற்றொரு வழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கபட்டு உள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஜியா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் நீதிபதி மேலும் மூன்று பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.
வங்காளதேசத்தின் தற்போதைய அதிபர் ஷேக் ஹசீனாவின் அரசியல் எதிரியாக பார்க்கப்படும் கலிதா ஜியா மீது 34 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள இந்த வழக்குகள் பெரும்பாலும் ஊழல் வழக்குகளாகும். ஊழல் குற்றச்சாட்டுக்களால், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு தேர்தலில் போட்டியிட முடியாமல் புறக்கணிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஜியா தள்ளப்பட்டார். இதன் காரணமாக அப்போது, வங்காள தேசம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. வரும் டிசம்பர் மாதம் வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கலிதா ஜியாவை போட்டியிடாமல் வைக்க ஆளும் கட்சி செய்யும் சதியே இது என்று கலிதா ஜியா ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
Related Tags :
Next Story