ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா-7 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு


ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா-7 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு
x
தினத்தந்தி 2 Nov 2018 11:47 AM GMT (Updated: 2 Nov 2018 11:47 AM GMT)

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் 7 நாடுகளுக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்க அமெரிக்கா முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுசக்தி   ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

மேலும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். அமெரிக்கா மிரட்டியபோதிலும், நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகும் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

ஆனால் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்கா மீண்டும் மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு தற்காலிகமாக அமெரிக்க விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியா இதனை அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பார் என தெரிகிறது. 

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:- 

ஈரான் ஈட்டும் பணத்தை தீவிரவாதத்துக்கு செலவிட்டு வருகிறது என நாங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறோம். அமெரிக்காவின் இந்த இலக்கில் எந்த மாற்றமும் இல்லை.

எனவே அந்த நாடு நிதி குவிப்பதை தடுக்க முயன்று வருகிறோம். ஈரானிடம் இருந்து நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அறிவித்து இருந்தோம்.

எனினும் சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாக அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளும் விரைவில் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு இதனை தொடர முடியாது.’’ என தெரிவித்துள்ளார்.

ஈரானிடம் இருந்து அதிகஅளவு கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சீனா உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா தற்காலிகமாக விலக்கு அளித்துள்ளபோதிலும், சீனாவுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக சீனாவுடன், அமெரிக்கா தரப்பில் பேச்சவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Next Story