ஆசியா பிபி வெளிநாடு சென்றதாக வெளியான செய்தி பொய்யானது - பாகிஸ்தான்


ஆசியா பிபி வெளிநாடு சென்றதாக வெளியான செய்தி பொய்யானது - பாகிஸ்தான்
x
தினத்தந்தி 8 Nov 2018 9:26 AM GMT (Updated: 8 Nov 2018 9:26 AM GMT)

தெய்வ நிந்தனை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பிபி வெளிநாடு சென்றதாக வெளியான செய்தி பொய்யானது என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஆசியா பிபி என்ற கிறிஸ்தவப் பெண்ணுக்கு தெய்வ நிந்தனை வழக்கில் விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதை லாகூர் ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதை எதிர்த்து அவர் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் அமர்வு, அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தானில் மதவாத அமைப்புகளும், கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.

இந்நிலையில் மால்டான் சிறையிலிருந்து ஆசியா பிபி விடுதலை செய்யப்பட்டார். ராவல்பிண்டியில் உள்ள விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என செய்திகள் வெளியாகியது. பாகிஸ்தான் மீடியாக்கள் அனைத்தும் இச்செய்தியை ஒளிபரப்பு செய்தனர். இப்போது இச்செய்தியை பாகிஸ்தான் அரசு போலியானது என்று மறுத்துள்ளது. “ஆசியா பிபி பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டார் என்பதில் துளியும் உண்மையில்லை, இது முற்றிலும் பொய்யான செய்தியாகும்” என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் ஊடங்களை சாடியுள்ள தகவல்தொடர்புத் துறை அமைச்சர் பாவத் சவுதாரி, தலைப்புச் செய்திகளுக்காக போலியான செய்திகளை வெளியிடுவது மீடியாக்களின் இன்றைய விதியாகி விட்டது. ஆசியா பிபி மிகவும் முக்கியமானது விஷயமாகும், செய்தியை வெளியிடுவது மிகவும் பொறுப்புமிக்கது. உறுதியில்லாமல் ஆசியா பிபி வெளியேறினார் என செய்தி வெளியிடுவது பொறுப்பற்ற செயலாகும். மீடியாக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார். 

Next Story