போராட்டத்தை அடக்க பெண்களை துஷ்பிரயோகம் : ராணுவம் மன்னிப்பு கோரியது


போராட்டத்தை அடக்க பெண்களை துஷ்பிரயோகம் : ராணுவம் மன்னிப்பு கோரியது
x
தினத்தந்தி 9 Nov 2018 10:54 AM GMT (Updated: 9 Nov 2018 10:54 AM GMT)

அரசுக்கு எதிராக கிளர்ந்த போராட்டத்தை அடக்க 38 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களை துஷ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாக தென்கொரியா மன்னிப்பு கோரியுள்ளது.

தென்கொரியாவில் 1980 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஜனநாயகவாதிகள் நடத்திய  போராட்டத்தை ஒடுக்க அரசால் களமிறக்கப்பட்ட ராணுவத்தினர் நூற்றுக்கணக்கான பெண்களையும், இளம்பெண்களையும் கொடூர பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினர். குடியிருப்புக்குள் நுழைந்து கர்ப்பிணிகளையும் பலாத்காரம் செய்துள்ளனர். 

தென் நகரமான க்வாங்ஜு-ல் இளைஞர்கள் பலர் ராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது மட்டுமின்றி சித்திரவதை செய்தும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் மாயமானவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் என அரசு வெளியிட்ட கணக்கு 200 என்றாலும் சம்பவ பகுதியில் இருந்த சர்வதேச ஊடகங்களின் கணக்கு ஆயிரக்கணக்கானோர் என பதிவாகியுள்ளது.

போராட்டத்தை ஒடுக்க ராணுவம் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம், துஷ்பிரயோகம் என கண்மூடித்தனமாக நடந்து கொண்டது. ஆனால் இச்சம்பவம் தொடர்பில் எவரும் புகார் அளிக்க முன்வராததால் கடந்த 38 ஆண்டுகளாக அரசாங்கத்தால் மூடியே வைக்கப்பட்டு வந்தது.

தேர்தல் நெருங்கிய நிலையில் இச்சம்பவம் தற்போது வெளிக்கொணரப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கிம் சன்-ஓகே  என்பவர் செய்தி ஊடகம் ஒன்றின் பேட்டியின் போது ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ராணுவத்துக்கு எதிராக 17 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உலக மக்களின் மனசாட்சியை உலுக்கிய இச்சம்பவத்தில் தென் கொரியாவின் உள்விவகாரத்துறை அமைச்சகமே மன்னிப்பு கோரியுள்ளது. தங்களுக்கு நேர்ந்த துயரங்களை பகிர்ந்து கொள்ளவே துணிவற்ற ஆயிரக்கணக்கானோருக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாகவும் ராணுவ தளபதி சூன் டூ-ஹவான்  அறிவித்தார்.

Next Story