வெள்ளை மாளிகையில் நிருபருக்கு தடை: டிரம்புக்கு எதிராக சி.என்.என். சேனல் நிறுவனம் வழக்கு


வெள்ளை மாளிகையில் நிருபருக்கு தடை: டிரம்புக்கு எதிராக சி.என்.என். சேனல் நிறுவனம் வழக்கு
x
தினத்தந்தி 13 Nov 2018 6:30 PM GMT (Updated: 13 Nov 2018 6:06 PM GMT)

வெள்ளை மாளிகையில் நிருபருக்கு தடை விதித்த டிரம்புக்கு எதிராக, சி.என்.என். சேனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பிரபலமான சி.என்.என். டெலிவி‌ஷன் சேனலின் வெள்ளை மாளிகைக்கான தலைமை நிருபர் ஜிம் அகோஸ்டா, டொனால்டு டிரம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஜிம் அகோஸ்டாவின் பத்திரிகையாளர் அனுமதி சீட்டு முடக்கப்பட்டது. அவர் வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, டொனால்டு டிரம்ப் உள்பட வெள்ளை மாளிகை நிர்வாகிகள் 6 பேர் மீது வாஷிங்டனில் உள்ள மாவட்ட கோர்ட்டில் சி.என்.என். சேனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், அரசியல் சட்டம் வழங்கிய உரிமைகள், ஜிம் அகோஸ்டாவுக்கு மறுக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது அனுமதி சீட்டை மீண்டும் அளிப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் கோரி உள்ளது.



Next Story