மலேசியா மாரியம்மன் கோவிலில் பயங்கர தாக்குதல், 21 பேர் கைது; விசாரணைக்கு வலியுறுத்தல்


மலேசியா மாரியம்மன் கோவிலில் பயங்கர தாக்குதல், 21 பேர் கைது; விசாரணைக்கு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Nov 2018 11:03 AM GMT (Updated: 27 Nov 2018 11:41 AM GMT)

மலேசியாவில் உள்ள மாரியம்மன் கோவிலில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவின் செலங்கோர் மாநிலத்தில் உள்ள சுபாங் ஜெயா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.  பழமையான கோவில் அமைந்துள்ள இடம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடம் என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் கோவிலை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்ற போதும் கோவிலை மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் கோவிலை இடமாற்றம் செய்ய ஒருதரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்காக வழங்கப்பட்ட காலக்கெடு சமீபத்தில் முடிந்தது, இதனையடுத்து 24 மணி நேரமும் கோவில் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது.

பயங்கரத் தாக்குதல்

இந்நிலையில் கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்தபோது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை நோக்கி கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. கோவிலில் இருந்த  பொருட்களையும் சேதப்படுத்தியது. அங்கிருந்த கோவில் நிர்வாகிகள், பூசாரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். பூர்வீக மலாய் மக்களான அவர்கள் கோவிலுக்குள் இருந்த அனைவரையும் வெளியே அடித்து விரட்டியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த கார்களும் சேதப்படுத்தப்பட்டது. 10க்கும் மேற்பட்ட கார்கள் அடித்துக் நெறுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 விசாரணைக்கு வலியுறுத்தல்

இதற்கிடையே இருதரப்பு இடையிலான மோதல்தான், இனவாத ரீதியிலான மோதல் கிடையாது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, போலீஸ் நேர்மையாக செயல்படுவதிலிருந்து தவறுகிறது எனவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனையடுத்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனம் இடையிலான மோதல் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காண சுதந்திரமான விசாரணை அவசியமானது என அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

 பிரதமர் அலுவலக அமைச்சர் பி வேத மூர்த்தி பேசுகையில், கோவில் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

இதற்கிடையே வணிக வளாகம் ஒன்றில் அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  

21 பேர் கைது

கோவில் மீதான தாக்குதல் மற்றும் வணிக வளாகம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 21 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story