அமெரிக்காவில் கட்டிடத்தின் மீது விமானம் மோதி தீப்பிடித்தது - 2 பேர் பலி


அமெரிக்காவில் கட்டிடத்தின் மீது விமானம் மோதி தீப்பிடித்தது - 2 பேர் பலி
x
தினத்தந்தி 2 Dec 2018 10:30 PM GMT (Updated: 2 Dec 2018 7:22 PM GMT)

அமெரிக்காவில் கட்டிடத்தின் மீது விமானம் மோதி தீப்பிடித்த விபத்தில் 2 பேர் பலியாயினர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் புளோரிடா மாகாணம், போர்ட் லாடர்டேல் நிர்வாக விமான நிலையத்தில் இருந்து ஒரு குட்டி விமானம் (செஸ்னா 335 ரகம்), ஹில்லியார்டு நகரை நோக்கி நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டு சென்றது.

அதில் ஒரு பயணியும், விமானியும் மட்டும் இருந்தனர். அந்த விமானம் அடுத்த சில நிமிடங்களில் அதே பகுதியில் அமைந்துள்ள ‘ஆட்டிசம்’ என்ற மன இறுக்க நோய்க்கு ஆளான குழந்தைகள் சிகிச்சை மைய கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்தது.

இதில் அந்த கட்டிடத்தின் வெளிப்பகுதி பலத்த சேதம் அடைந்தது. விமானத்தில் பயணம் செய்த 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்த விமானம் மோதிய போது கட்டிடத்துக்குள் 5 குழந்தைகளும், 8 பெரியவர்களும் இருந்ததாகவும், விபத்தில் ஒரு ஆசிரியர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விபத்தை தொடர்ந்து அங்கிருந்த குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த விபத்துக்கான பின்னணி என்ன என்பது குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்துகிறது.


Next Story