இரு நாட்டு தலைவர்கள் பேச்சில் உடன்பாடு: அமெரிக்கா, சீனா வர்த்தகப்போர் நிறுத்தம் - ஜனவரி 1 முதல் கூடுதல் வரி விதிப்பு கிடையாது


இரு நாட்டு தலைவர்கள் பேச்சில் உடன்பாடு: அமெரிக்கா, சீனா வர்த்தகப்போர் நிறுத்தம் - ஜனவரி 1 முதல் கூடுதல் வரி விதிப்பு கிடையாது
x
தினத்தந்தி 2 Dec 2018 11:00 PM GMT (Updated: 2 Dec 2018 7:38 PM GMT)

இரு நாட்டு தலைவர்கள் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால் அமெரிக்கா, சீனா வர்த்தகப்போர் நிறுத்தி வைக்கப்படுகிறது.

பியுனோஸ் அயர்ஸ்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் இடையே நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. இரு நாடுகள் இடையேயான வர்த்தகப்போர் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஜனவரி 1 முதல் கூடுதல்வரி விதிப்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வந்தது. வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில், சீனா தன்னை வஞ்சித்து விட்டதாக அமெரிக்கா கருதியது.

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களையும், தொழில் நுட்பத்தையும் சீனா திருடிக்கொண்டு தங்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து வெளியிட்டார். இதை சீன அதிபர் ஜின்பிங் மறுத்தார். ஆனாலும், அமெரிக்கா சீன இறக்குமதிகள் மீது தொடர்ந்து கூடுதல் வரி விதிப்பை அறிவித்தது. சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை உயர்த்தியது.

இப்படி சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கடந்த ஜூலை மாதம் முதல் 250 பில்லியன் டாலர் (1 பில்லியன் என்பது 100 கோடி, ஒரு டாலரின் மதிப்பு சுமார் ரூ.70) அளவுக்கு கூடுதல் வரியை விதித்தது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் அளவுக்கு அதிக வரியை விதித்தது.

இரு நாடுகள் இடையேயான இந்த வர்த்தகப்போர் உலகமெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்தது. இதில் இரு தரப்பு வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்துகிற வகையில், ஜனவரி 1-ந் தேதி முதல் இரு நாடுகளும் ஒன்றின்மீது மற்றொன்று கூடுதல் வரிகளை விதிப்பது இல்லை என்று உடன்பாடு செய்துகொண்டனர். இது 90 நாட்களுக்கு நீடிக்கும்.

இரு நாடுகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

அதில் ஜனவரி 1-ந் தேதி முதல் சீனப்பொருட்கள் மீதான வரியை 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீத அளவுக்கு உயர்த்தி (200 பில்லியன் டாலர் மதிப்பு) அமல்படுத்த இருந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு வழிவிடுகிற வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

சீனாவும் அமெரிக்காவில் இருந்து கூடுதல் அளவிலான விவசாய உற்பத்தி பொருட்கள், எரிசக்தி, தொழில் சாதனங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முன் வந்துள்ளது.

அதே நேரத்தில் சீனாவுடன் நடத்துகிற வர்த்தக பேச்சுவார்த்தை 90 நாட்களில் வெற்றி அடையாவிட்டால், திட்டமிட்டபடி நிறுத்தி வைக்கப்பட்ட வரி விதிப்பு அமலுக்கு வரும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சீன வெளியுறவு மந்திரி வாங் யி நிருபர்களிடம் பேசுகையில், “அமெரிக்கா, சீனாவின் வர்த்தக சந்தையையும், சீனா அமெரிக்காவின் வர்த்தக சந்தையையும் திறந்து விட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்” என கூறினார்.


Next Story